வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் - கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழைக் காலமாகும். கடந்த ஜூன் 3ஆம் தேதி கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா என தீவிரமடைந்த மழை வட மாவட்டங்களை சூறையாடி வருகிறது.
டெல்லி, மகாராஷ்டிரா, கோவா,ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு பலரின் உயிரை பறித்து வருகிறது.
சிறையில் மரணமடைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்தி ஜூலை 29-ல் மதுரை வருகை
வெள்ளக்காடான மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் கடந்த வாரம் 2 நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் கொங்கன் மற்றும் மேற்கு மராட்டிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. குறிப்பாக ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, தானே, பால்கர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது.
உயிரிழப்பு அதிகரிப்பு
நகர்ப்புறங்களும், கிராமங்களும் வெள்ளத்தில் மிதந்தன. மேலும் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், ஆங்காங்கே நடந்த நிலச்சரிவில் புதைந்தும் உயிரிழந்தனர். தொடா்மழையால் அங்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது.
பலர் மாயம்
மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவர்களில் 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தெரியவந்துள்ளது. அங்கு மழையால் 13 மாவட்டங்களில் 1,043 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 259 சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டு 2,30,000 பேர் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், 25,581 விலங்குகளும் உயிரிழந்துள்ளன.
5 மாநிலங்களுக்கு கனமழை
இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.