90-95% காலி.. தோல்வியடைந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்! மழுப்பும் மத்திய அரசு.. சு.வெங்கடேசன் சுளீர்!
டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் புதியதாக உருவான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எவ்வளவு வெற்றியடைந்திருக்கின்றன என்கிற கேள்விக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதிலளிக்காமல் மழுப்பியுள்ளதாக சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டு தோறும் கணிசமான அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின்றன. இவற்றால் கணிசமான அளவு வேலை வாய்ப்புகள் உருவாகிறது என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில் இந்த நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 90-95% ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வியடைந்துள்ளதாக அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
2022 நினைவுகள் : பாமக தலைவராக அன்புமணியின் 6 மாதம்! நீங்க எத்தனை மார்க் போடுவீங்க! ரெடி ஸ்டார்ட்!
கேள்வி
இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்றத்தில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. இதனை அவர் தற்போது பகிர்ந்திருக்கிறார். அதாவது, "புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 90-95% வரை தோல்வி அடைவதாக வந்துள்ள செய்திகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளனவா? அப்படியெனில் தோல்வி சதவிகிதம் சிறு குறு தொழில்களில் எவ்வளவு? அரசின் கணக்குகளில் மேற்கூறிய ஊடக ஆய்வுகளுடன் ஒத்துப் போகிறதா? இல்லையெனில் அரசின் கணக்குப்படி தோல்வி சதவீதம் எவ்வளவு?" என்று கேள்விகளை எழுப்பி எழுப்பி இருந்தார்.
அங்கீகாரம்
இதற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சரான நாராயண் டாட்டு ரானே பதிலளித்திருந்தார். பதிலில், "1961ம் ஆண்டின் நடவடிக்கை ஒதுக்கீடு விதிகளின்படி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில் மற்றும் வணிக அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்வர்த்தக வளர்ச்சித் துறையின் (DPIIT) கீழ் வருகிறது. அத்துறை தந்த தகவல்களின்படி இந்திய அரசு ஸ்டார்ட் அப் முன்முயற்சி குறித்து விரிவான அணுகுமுறையை வகுத்துள்ளது. இதனால் தேசத்தின் ஸ்டார்ட் அப் சூழல் முறைமை முதிர்ச்சி அடைந்து உலகின் மூன்றாவது பெரும் ஸ்டார்ட் அப் சூழல் முறைமையாக வளர்ந்துள்ளது. 640 மாவட்டங்களில் 84,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
கைவிரித்த மத்திய அரசு
அவற்றில் 45 சதவீத நிறுவனங்கள் இரண்டாம், மூன்றாம் தட்டு நகரங்களில் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 8.4 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் ரூ.8,000 கோடி மதிப்புள்ள "யூனிகார்ன்" அந்தஸ்தை பெற்றுள்ளன. வழமையான வணிகங்களின் வெற்றி, தோல்வி குறிப்பிட்ட ஆண்டுகளின் செயல்பாடு அடிப்படையில் தீர்மானிக்கப்படும் போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வெற்றி தோல்வி துல்லியமாக ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மதிப்பிடப்படுவதாக உள்ளது. எல்லா வகை புதிய நிறுவனங்களையும் ஒட்டு மொத்த மதிப்பீட்டுக்குள் கொண்டு வருவது கடினம். ஆகவே அவற்றின் தோல்வி விகிதத்தை கணக்கிடுவதும் சிரமம். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மையப்படுத்தப்பட்ட தகவல்கள் அரசிடம் இல்லை" என கூறப்பட்டிருந்தது.
தம்பட்டம்
மத்திய அமைச்சரின் இந்த பதிலுக்கு சு.வெங்கடேசன் எம்பி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். அதாவது, "அமைச்சர் பதில் அதிர்ச்சி தருகிறது. 90 சதவிகிதம் முதல் 95 சதவிகிதம் வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் தோல்வி அடைந்துள்ளன என்பது எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டு அல்ல. பிரபல வணிக இதழ்களின் ஆய்வுகள் தந்துள்ள தகவல்கள் ஆகும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் இந்திய இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் என்ற நிலையில் இருந்து வேலை தருபவர்களாக மாறி விட்டார்கள் என்று பிரதமர் உட்பட அமைச்சர்கள் தம்பட்டம் அடித்தார்கள்.
வெளிப்படைத் தன்மை வேண்டும்
ஒரு அறிவிப்பை பரபரப்பாக வெளியிட்டு விளம்பரம் தேடுவது, பிறகு அதன் வெற்றி தோல்வியை கூட மதிப்பிட அளவுகோல் வைத்திருக்காமல் அடுத்த பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவது என்பதே அரசின் வாடிக்கை ஆகிவிட்டது. எவ்வளவு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைந்துள்ளன என்பது பற்றி மையப்படுத்தப்பட்ட தகவல்களே அரசிடம் இல்லை என்று அமைச்சர் கூறுவது அதிர்ச்சி தருகிறது. வேலையின்மை குறித்தும் அரசிடம் தகவல் சேகரிப்பு இல்லை. சி.எம்.ஐ.இ விபரங்களை வெளியிட்டால் ஏற்க மாட்டார்கள். சர்வதேச நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டால் உள் நோக்கம் கூறுவார்கள். இது என்ன நியாயம்? அரசு தனது திட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் வெளிப்படையாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.