பரோலில் வந்து பாலியல் தொல்லை.. இதான் “நன்னடத்தையா”? மோடி, அமித்ஷாவிடம் கேட்கும் மஹுவா மொய்த்ரா
டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளான 11 பேர் கொண்ட கும்பல் முன்விடுதலை செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர் 2020 ஆம் ஆண்டு பரோலில் வந்த நேரத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதுதான் நன்னடத்தையா என பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். 2005 ஆம் ஆண்டு இது தொடர்பாக மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தது.
தடையை மீறி அதிமுக போராட்டம்? முன்னெச்சரிக்கையாக குவிக்கப்பட்ட போலீசார்..பரபரப்பில் வள்ளுவர் கோட்டம்!
கலவரம்
இதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவ அமைப்பினர் குஜராத் முழுவதும் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதல்களை தொடங்கினர். காவல்துறையின் கட்டுப்பாடுகள் இன்றி கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
பில்கிஸ் பானு
28 ஆம் தேதி தொடங்கிய கலவரம் மார்ச் மாதம் வரை நீண்டது. மார்ச் 3 ஆம் தேதி தஹோத் மாவட்டத்தில் உள்ள ரந்திக்புர் கிராமத்தில் கலவரம் வெடித்தது. அப்போது 30 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பில்கிஸ் பானு மற்றும் அவரது சிறுவயது மகள் மற்றும் பிற 15 குடும்ப உறுப்பினர்களைத் தாக்கியது. இதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
கூட்டு பலாத்காரம்
அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் அந்த கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது ஒரு வீட்டில் இருந்த 19 வயது கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானுவை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. நாட்டையே அதிர வைத்த இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதன் முதல் கட்ட விசாரணை குஜராத்தின் அகமதாபாத்தில் தொடங்கப்பட்டது.
ஆயுள் தண்டனை
ஆனால், சாட்சிகளை அழித்ததாகவும் மற்றும் சாட்சியங்களை சேதப்படுத்தியதாகவும் கூறி மும்பைக்கு வழக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் 2008 ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் இவர்களின் தண்டனையை உறுதி செய்தது.
விடுதலை
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரும் குஜராத் அரசு பொதுமன்னிப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்ததாலும், குற்ற தன்மையை கருத்தில் கொண்டும் விடுவிக்க ஆணை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தண்டனை பெற்ற 11 பேரும் கடந்த ஆகஸ்டு மாதம் கோத்ரா துணைச் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
குஜராத் அரசு
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், குஜராத் அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பில்கிஸ் பானு வழக்கில் கைதான 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என குஜராத் அரசு கூறியது கடுமையான விமர்சனத்துக்கு வித்திட்டு இருக்கிறது.
பரோலில் தொல்லை
இந்த நிலையில் குஜராத் அரசி பிரமாண பத்திரத்தில், குற்றவாளிகள் ஒருவரான மிதேஷ் சிமன்லால் பட் கடந்த 2020 ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்தபோது பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக தஹோத் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மஹுவா மொய்த்ரா
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ரா, "பில்கிஸ் பானு பலாத்கார வழக்கின் குற்றவாளி மிதேஷ் பட் கடந்த 2020 ஆம் ஆண்டு பரோலி வந்தபோது பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பிரகலாத் ஜோஷி ஆகியோர் நன்னடத்தை குறித்து விளக்க வேண்டும். அச்சே தின், அச்சே லோக் போல் பெண்ணிடம் தவறாக நடந்துகொள்வது நன்னடத்தையா?" என குறிப்பிட்டுள்ளார்.