பெரிய தீவிரவாத சதித்திட்டம் முறியடிப்பு.. டாப் லெவல் மீட்டிங்கிற்கு பின் மோடி டிவிட்.. என்ன நடந்தது?
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய முயன்ற தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்ததன் மூலம் மிகப்பெரிய தீவிரவாத சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடனான மீட்டிங்கிற்கு பின் பிரதமர் மோடி இப்படி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவமும், பாக் ராணுவத்தின் உதவியோடு தீவிரவாதிகளும் அடிக்கடி அத்துமீறி வருகிறார்கள்.
குளிர்காலத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் அந்நாட்டு தீவிரவாதிகளை இந்தியாவிற்கு அனுப்ப முயன்று வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் நேற்று நக்ரோட்டா பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
லடாக்கில் உயிரிழந்த, ராணுவ வீரர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை- எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு
நேற்று அதிகாலை
நேற்று அதிகாலை நக்ரோட்டா தேசிய நெடுஞ்சாலையில் சின்ன லாரி ஒன்றில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை இந்தியா ராணுவம் என்கவுண்டர் செய்தது. அதிகாலை நடந்த துப்பாக்கி சண்டைக்கு பின் இந்த நான்கு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தியாவிற்கு உள்ளே நுழைய இவர்கள் திட்டம் தீட்டி இருந்ததாக கூறப்படுகிறது.
சதித்திட்டம்
இந்த நான்கு தீவிரவாதிகளும் இந்தியாவிற்குள் நுழைந்து மும்பை ஸ்டைல் 26/11 அட்டாக்கை நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். 26/11 நினைவு தினத்தில் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று உளவு தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த தீவிரவாதிகளின் சதித்திட்டம் குறித்து பிரதமர் மோடி இன்று விரிவாக விவரங்களை கேட்டறிந்தார். இதன் பின், மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார்.
முறியடிப்பு
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் 4 தீவிரவாதிகளை எனக்கவுண்டர் செய்ததோடு அவர்களின் ஆயுதங்களையும் கைப்பற்றி இந்திய ராணுவம் அதிரடியாக செயல்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது, என்று பிரதமர் மோடி தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.
எப்படி நடந்தது
முன்னதாக இந்த என்கவுண்டர் குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டனர். நேற்று நடந்த என்கவுண்டர் குறித்தும், தீவிரவாதிகளின் சதித்திட்டம் குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்பட்டது.