காங்கிரசில் வரிசையாக விழும் விக்கெட்டுகள்.. குலாம் நபி ஆசாத் லேட்டஸ்ட்.. முழு லிஸ்ட் இதோ!
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து நீடித்து வரும் ராஜினாமா நடவடிக்கைகள் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரும் தேசிய செய்தி தொடர்பாளருமான ஷெர்கில் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதாக அறிவித்தார்.
ஏற்கெனவே ஆனந்த் சர்மா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தற்போது குலாம் நபி ஆசாத் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதாக அறிவித்துள்ளார்.
பாஜக பிரமுகரை கொல்ல முயற்சி.. கைதாகி ஜாமினில் வந்த காங்கிரஸ் கவுன்சிலருக்கு பாலாபிஷேகம்..
பாரம்பரியம்
நாட்டின் சுதந்திரத்திற்கு போராடிய கட்சிகளில் காங்கிரஸ் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்தியாவை சுதந்திரத்திற்கு பிறகு நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சியாக காங்கிரஸ் திகழ்கிறது. ஆனால் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இந்த நிலை தலைகீழாக மாறியது. கட்சியின் செல்வாக்கு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சரிவைநோக்கி சென்றது. இந்நிலையில் தற்போது கட்சியின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
2019 தோல்வி
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியதையடுத்து கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல 23 தலைவர்கள் கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினர். அப்போதிலிருந்து கட்சிக்குள் பெரும் சலசலப்புகள் நீடித்தது வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு தலைவர் பொறுப்பில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா திடீரென ராஜினாமா செய்தார்.
குலாம் நபி ஆசாத்
தாம் காங்கிரஸில் 51 ஆண்டுகள் இருந்த போதும் சீனியர் என்ற முறையில் தம்மிடம் எதையுமே ஆலோசிக்காமல் அவமானப்படுத்தப்பட்டிருப்பதாக ஆனந்த் சர்மா கூறியுள்ளார். இதற்கு முன்னதாக ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக அண்மையில் குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். ஆனால் இவ்வாறு நியமிக்கப்பட்ட உடனே அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து கட்சியின் இளம் தேசிய செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
ஜோதிராதித்ய சிந்தியா
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா உள்ளிட்ட காந்திகளை சந்திக்க நேரம் கேட்டும் ஒதுக்கப்படவில்லை என்றும் ஷெர்கில் குற்றம்சாட்டினார். மேலும் காங்கிரஸ் கட்சியில் எடுக்கப்படும் முடிவுகளானது அடிப்படை யதார்த்தத்துடன் ஒன்றிப்போவதில்லை என்றும் அவர் விமர்சித்திருந்தார். இதற்கெல்லாம் முன்னதாக கடந்த 2020 மார்ச்சில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
மத்தியப் பிரதேசம்
2018 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர உதவியது இவர்தான். மாநிலத்தில் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியுடனான தனது 18 ஆண்டு கால உறவை அவர் முறித்துக்கொண்டார். சிந்தியா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமாக இருந்த 20 எம்எல்ஏக்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இவ்வாறு விலகிய அவர் பின்னர் பாஜகவில் சேர்ந்தார். அதன் பின்னர் அவருக்கு எம்பி பதவி கொடுக்கப்பட்டு, அவர் தற்போது சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார்.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் வலுவாக இருந்த காலத்தில் அதன் முக்கிய தலைவர்களில் ஒருவராக ஜிதின் பிரசாதா இருந்தார். காங்கிரஸ் கட்சியின் அம்மாநிலத்தின் பிராமண சமூகத்தின் முக்கிய முகமாக இருந்தவர் இவர். இளைஞர் காங்கிரஸில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரசாத், 2004 இல் முதல் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமைச்சராகவும் பிரசாத் செயல்பட்டு வந்தார். இதனையடுத்து காங்கிரஸ் அவரை 2021 மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது. ஆனால், மேற்கு வங்கத்தில் அக்கட்சி மிகவும் மோசமான நிலையில் தோல்வியை சந்தித்தது. இதன் 2021 ஜூன் மாதம் பிரசாத் பாஜகவில் இணைந்தார். இதன் தொடர்ச்சியாக யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
குஜராத்
குஜராத் மாநிலத்தில் 'பாடிதார் ஒதுக்கீட்டு' எதிர்ப்பு போராட்டங்களின் முகமாக அறியப்பட்டவர்தான் ஹர்திக் படேல். இவர் குஜராத் அரசியலின் எதிர்காலம் என்று கணிக்கப்பட்டார். ஆனால் அவரால் தொடர்ந்து பெரிய போராட்டங்களை நடத்த முடியவில்லை. இதனையடுத்து கடந்த 2019ல் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஆனால் மாநிலத்தில் அனைத்து இடங்களையும் பாஜக கைப்பற்றியது. இப்படியாக ஏறத்தாழ 3 ஆண்டு காலம் காங்கிரஸில் பணியாற்றிய பின்னர் அவர் பாஜவில் சேர்ந்தார். ஆனால் தற்போது வரை பாஜக இவருக்கு எந்த பொறுப்பையும் வழங்கவில்லை.
மகளிர் பிரிவு
மாநிலங்களில் இவ்வாறு நிலை இருக்க, கட்சியின் மகளிர் பிரிவு தேசியத் தலைவராக பணியாற்றிய சுஷ்மிதா தேவ் கடந்த 2021ல் கட்சியின் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் அசாமின் முக்கிய முகங்களில் ஒருவர். ஒரு முறை எம்பியாகவும் பணியாற்றியுள்ளார். இதனையடுத்து கடந்த 2019ல் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார். இதன் தொடர்ச்சியாக அவர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார். அக்கட்சி அவரை ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளது.