டெல்லிக்கு ஓடியாந்துருங்க.. ம.பி. பகுஜன் எம்எல்ஏக்களுக்கு மாயாவதி அவசர அழைப்பு!
டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் வெற்றி பெறும் 4 வேட்பாளர்களையும் உடனடியாக டெல்லிக்கு வருமாறு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அழைத்துள்ளார்.
இவர்களை பாஜக வளைத்து பிடித்து விடும் என்ற அச்சத்தால் டெல்லிக்கு அழைத்துள்ளார் மாயாவதி. மத்தியப் பிரதேசத்தில் யார் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது என்பதில் குழப்பம் நிலவுகிறது. காரணம், பாஜகவும், காங்கிரஸும் அங்கு மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால்.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு அங்கு 4 இடங்களில் வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது. பாஜக 112, காங்கிரஸ் 107 என ஊசலாடி வருகின்றன.
116 இடங்கள் தேவை
பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை. எனவே பாஜக தரப்பில் பிற எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
நான்கு பேர்
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் 4 எம்எல்ஏக்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். இதனால் அவர்களை உடனடியாக டெல்லிக்கு வருமாறு மாயாவதி அழைத்துள்ளார்.
இரவோடு இரவாக ஆலோசனை
இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் இவர்கள் டெல்லி வந்து சேருவார்கள் எனத் தெரிகிறது. அவர்களுடன் ம.பியில் யாருக்கு ஆதரவு தருவது என்று மாயாவதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
பாஜக, காங்கிரஸ்
மறுபக்கம் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவைக் கோரி பாஜக மற்றும் காங்கிரஸ் தரப்பில் பலர் களமிறங்கி விட்டதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அவர்கள் மாயாவதியை அணுகியுள்ளனராம். ஆனால் மாயாவதி யாருக்கும் இன்னும் பதில் சொல்லவில்லை.
மாயாவதி மீது சிபிஐ வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன என்பது நினைவிருக்கலாம்.