மோடி - ராகுலுக்கு சிக்கல்? தேர்தல் விதிமீறல் புகாரில் பதிலளிக்க அவகாசம் கோரி நட்டா, கார்கே கடிதம்
டெல்லி: தேர்தல் விதிகளை மீறி பிரதமர் மோடி, ராகுல் காந்தி பேசியதாக கூறப்படும் புகாரில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. விளக்கமளிக்க நேற்று கடைசி நாள் என்ற நிலையில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளிக்கவில்லை. மாறாக அவர்கள் கூடுதல் காலஅவகாசம் கோரியுள்ளனர்.
நம் நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2வது கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடந்தது. இந்நிலையில் தான் 2வது கட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.

மேலும் தலைவர்களின் பேச்சு என்பது சர்ச்சையானது. குறிப்பாக கடந்த 21ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி பேசியது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது.
அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதே அதற்கு சாட்சி. இதனால் பெண்களின் தாலி கூட மிஞ்சாது'' என்றார். இதில் ஊடுருவல்காரர்கள் என பிரதமர் மோடி முஸ்லிம்களை மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் தான் இருதரப்பினர் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கப்பட்டது. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மீதும் தேர்தல் ஆணையத்தில் பாஜகவினர் புகாரளித்தனர். அதாவது ராகுல் காந்தி சிறுபான்மையினரிடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார் என அவரது பேச்சுக்களை சுட்டிக்காட்டி பாஜக தரப்பில் புகாரளிக்கப்பட்டது.
இந்த புகார்களை தொடர்ந்து கடந்த 25ம் தேதி தேர்தல் ஆணையம் சார்பில் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர்
மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்பட்டது.. பொதுவாக தேர்தல் விதிமீறி பேசினால் நேரடியாக குறிப்பிட்ட தலைவருக்கு தான் நோட்டீஸ் அனுப்பப்படும். ஆனால் பிரதமர் மோடிக்கு பதிலாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, ராகுலுக்கு பதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது விவாதத்தை கிளப்பியது.
ஆனால் பிரதமர் மோடி பாஜக சார்பில் நட்சத்திர பேச்சாளராகவும், ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளதால் அந்தந்த கட்சியின் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதோடு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நோட்டீசுக்கு ஏப்ரல் 29ம் தேதி காலை 11 மணிக்குள் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமை விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டது.
ஆனால் தேர்தல் ஆணையம் வழங்கிய கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இருப்பினும் தேர்தல் ஆணையத்தில் சம்பவம் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. மாறாக காலஅவகாசம் கோரப்பட்டுள்ளது. அதன்படி பிரதமர் மோடி மீதான புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க பாஜக தலைமை ஒரு வாரம் அவகாசம் கோரியுள்ளது. அதேபோல் ராகுல் காந்தி மீதான புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க காங்கிரஸ் தலைமை ஒருவாரம் அவகாசம் கோரியுள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.












Click it and Unblock the Notifications