மருத்துவ, முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போட அனுமதியில்லை.. மத்திய அரசு உத்தரவு.. ஏன் தெரியுமா?
டெல்லி: தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களின் புதிய பதிவுகளை இனி அனுமதிக்க வேண்டாம் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா 2-வது அலை வீசி வருகிறது. உலகளவில் தினசரி பாதிப்பில் முதலிடம் பிடிக்கும் அளவுக்கு கொரோனா தொற்று உச்சம் தொட்டு வருகிறது.
உலக நாடுகளான அமெரிக்கா, பிரேசிலை பின்னுக்கு தள்ளிவிட்டு தினசரி கொரோனா பாதிப்பு 90,00-ஐ கடந்துள்ளது. தினசரி உயிரிழப்பும் 700-ஐ கடந்து செல்கிறது.
அதிகரிக்கும் கொரோனா
மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கொரோனாவை தடுக்க இந்தியாவில் கோவாக்சின், கோவிஷில்டு என்ற 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. முதல் கட்டமாக மருத்துவ முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்ததாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களின் புதிய பதிவுகளை இனி அனுமதிக்க வேண்டாம் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறுகின்றனர்
இது தொடர்பாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:- சில கொரோனா தடுப்பூசி மையங்களில் தகுதிபெறாத சில பயனாளிகள் சுகாதாரம் மற்றும் முன்கள பணியாளர்கள் என பதிவு செய்யப்பட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை முழுமையாக மீறி தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள் என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இனி பதிவு செய்ய வேண்டாம்
டெல்லியில்மாநில பிரதிநிதிகள் மற்றும் கள அறிவு நிபுணர்களுடன் நடந்த கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையின் படி, சுகாதார மற்றும் முன்னணி பணியாளர்களுக்கான புதிய தடுப்பூசி பதிவுகள் எதுவும் இனி வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது இது உடனடியாக அமல்படுத்தப்படும். 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களின் பதிவு கோவின் போர்ட்டலில் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று ஜேஷ் பூஷண் கூறினார்.