இந்தியாவில் கொரோனா அதிகரித்தாலும்.. மக்களிடம் பயம் இல்லை.. 4வது அலை வரவில்லை? நிபுணர்கள் கருத்து இதோ
டெல்லி : நாடு முழுவதும் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், இதனை கொரோனாவின் 4வது அலை என்று கருதவில்லை எனவும், அதே நேரத்தில் பொதுமக்கள் கொரோனாவைக் கண்டு பயப்படுவதில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பின் அளவானது மீண்டும் உச்சத்தை தொட்டு வருகிறது. 10 ஆயிரத்துக்குள் இருந்த பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
ஒமைக்ரான் பிஏ4, பிஏ5 வகை மாறுபாடு காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா..சென்னையில் மாஸ்க் கட்டாயம்.. வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிரடி
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பானது மாறுபட்ட அளவில் பதிவாகி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 16 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஓமிக்ரானின் மூன்று புதிய திரிபுகள் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவை வீரியமற்றவையாக இருப்பதால்தான் பாதிப்பு எண்ணிக்கையானது மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.
4வது அலையா?
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், இதனை கொரோனாவின் 4வது அலை என்று கருதவில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்துப் பேசியுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்க்கான முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்காகேத்கர் ," நாடு முழுவதும் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனை 4 வது அலை என்று நான் கருதவில்லை.
மாஸ்க் கட்டாயம்
நம்மில் சிலர் முக கவசம் அணிவதில்லை. இதை வேறுவிதமாக சொல்ல வேண்டும் என்றால், நாம் கொரோனா தொற்றைப் பெறுவதற்கு பயப்படுவதில்லை. ஏற்கனவே உள்ள பிஏ4, பிஏ5 உள்ளிட்டவற்றின் பரவல் தான் மக்களிடம் பரவி வருகிறது. வயதானவர்கள், தடுப்பூசிகள் எடுக்காதவர்கள், இதுவரை நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள், கட்டாயமாக மாஸ்க்கை அணிய வேண்டும். '
வாய்ப்புகள் கிடையாது
புதிதாக ஒமைக்ரான் திரிபு ஏதும் கண்டறியப்படவில்லை. இதன் அடிப்படையில் 4வது அலை ஏதும் ஏற்பட வாய்ப்புகள் கிடையாது. இருப்பினும் மக்கள் இன்னும் சில காலத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்' என்றார். இந்நிலையில் அதிகரித்து வரும் நோய்பரவல் காரணமாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.