தலைநகரில் தொடரும் பதற்றம்... டெல்லியில் 10-க்கும் மேற்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்!
டெல்லி: டெல்லியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அங்குள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.
டிராக்டர் பேரணியில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் வன்முறை மூண்டது. டெல்லியே போர்க்களம்போல் காட்சியளிக்கிறது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களுடன் பிரமாண்ட பேரணியை திட்டமிட்டபடி விவசாயிகள் தொடங்கினார்கள். சில விவசாயிகள் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
ஆனாலும் தடுப்புகளை போலீசார் மீது எறிந்த விவசாயிகள் முன்னோக்கி சென்றனர். இதன் காரணமாக விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்தினார்கள்.
சிலர் போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள். 7 பஸ்கள் மற்றும் சில போலீஸ் வாகனங்களில் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. டெல்லி முழுவதும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருவதால் தலைநகர் போர்க்களம்போல் உள்ளது. இந்த நிலையில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.
சமாய்பூர் பத்லி, ரோஹினி பிரிவு 18/19, ஹைதர்பூர் பட்லி மோர், ஜஹாங்கிர் பூரி, ஆதர்ஷ் நகர், ஆசாத்பூர், மாடல் டவுன், ஜிடிபி நகர், விஸ்வவித்யாலயா, விதான் சபா மற்றும் சிவில் லைன்ஸ், இந்திரபிரஸ்தா மற்றும் ஐ.டி.ஓ ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களின் நுழைவு / வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளதாக டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியுள்ளது.