வெளிநாட்டு நிதி.. ஆஸ்பாம் தொண்டு நிறுவனத்துக்கு சிக்கல்! சிபிஐ விசாரணைக்கு மத்திய உள்துறை பரிந்துரை
டெல்லி: ஆக்ஸ்பாம் இந்தியா தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளிநாடு நிதிகளை பெறுவதில் இந்திய சட்ட விதிகளை மீறியதாக கூறி சிபிஐ விசாரணை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு பரிந்துரைத்து இருக்கிறது. இதன் உரிமத்தை புதுப்பிக்க கடந்த 2021 ஆம் ஆண்டிலேயே மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்து உள்ள நிலையில் தற்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவும் வகையில் பிரிட்டனில் தொடங்கப்பட்டது ஆக்ஸ்பாம் தன்னார்வ தொண்டு நிறுவனம். கென்யா தலைநகர் நைரோபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த ஆக்ஸ்பாம் நிறுவனம், இந்தியா உட்பட பல உலக நாடுகளில் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் வறுமையில் வாடும் மக்கள், உணவின்றி பசியால் வாடுபவர்கள், ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள், முதியோர்களுக்கு உணவு உட்பட பல்வேறு உதவிகளை செய்து வருவதுடன், இது தொடர்பாக ஆய்வு முடிவுகளையும் வெளியிட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள 20 நாடுகளில் செயல்பட்டு வரும் இந்த ஆக்பாம் நிறுவனத்திற்கு பல நாடுகளில் இருந்து பல கோடிக்கணக்கில் நிதி கிடைக்கிறது.
வெளிநாட்டு நிதி: இந்த நிலையில் ஆஸ்பாம் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு நிதிகளை பெறுவதில் இந்திய சட்ட விதிகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் ஆக்ஸ்பாம் நிறுவனம் வெளிநாட்டு நிதி பெற்றதில் விதிகளை மீறியதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு தற்போது பரிந்துரைத்து உள்ளது.
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் - 2010 இன் கீழ் நிதிகளை வசூலிப்பதற்கான ஆக்ஸ்பாம் இந்தியாவின் உரிமத்தை மத்திய அரசு 14 மாதங்களாக புதுப்பிக்காமல் இருந்தது. இந்த நிலையில் ஆக்ஸ்பாம் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு நிதி பங்களிப்புகளை FCRA வின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பி இருப்பதை மத்திய உள்துறை அமைச்சகம் கண்டுபிடித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

வருமான வரித்துறை சர்வே: இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஆக்ஸ்பாம் இந்தியா நிறுவனத்தின் FCRA உரிமத்தை புதுப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்ததை தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு வெளிநாட்டு நிதி கிடைப்பது நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள ஆக்ஸ்பாம் அலுவலகத்தில் வெளிநாட்டு நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக சர்வே மேற்கொண்டனர். இந்த வருமான வரித்துறை சர்வேயில் ஆக்ஸ்பாம் இந்தியா நிறுவனம் FRCA விதிகளை மீறி செயல்பட்டதற்கான ஆதாரமாக சில ஈமெயில்கள் கிடைத்து இருக்கின்றன.
பண பரிமாற்றம்: அதேபோல் பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆக்ஸ்பாம் இந்தியா நிறுவனத்திற்கு தாராளமாக நிதி வழங்கி வந்தது இந்த ஆய்வில் தெரியவந்து இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தியாவில் சமூக சேவைகளை மேற்கொள்வதற்காக பதிவு செய்யப்பட்ட ஆக்ஸ்பாம் அமைப்பு, அதன் ஊழியர்கள் மற்றும் துணை நிறுவனங்கள் மூலமாக சிபிஆர் எனப்படும் கொள்கை ஆராய்ச்சி மையத்திற்கு கமிஷனாக பணம் கொடுத்ததாகவும் அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். ஆஸ்பாம் இந்தியா நிறுவனத்தின் டிடிஎஸ் தகவலின் மூலம் கடந்த 2019 - 20 நிதியாண்டில் ரூ.12.71 லட்சம் சிபிஆர் நிறுவனத்துக்கு வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications