மோடி- அமித்ஷா கூட்டணி தொடர்ந்தால் 'அத்வானி' கதிதான்.. பீதியில் பாஜக தலைவர்கள்!
டெல்லி: பிரதமராக மீண்டும் மோடியும் பாஜக தலைவராக அமித்ஷாவும் நீடித்தால் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போல மேலும் பல மூத்த தலைவர்கள் ஓரம்கட்டப்பட வாய்ப்பிருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.
2014 தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது. அதிகாரத்தைக் கைப்பற்றிய உடனே கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அத்வானி, மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட பலரும் ஓரம்கட்டப்பட்டுவிட்டனர். துணை பிரதமராக பதவி வகித்த அத்வானிக்கு மரியாதை தரும் வகையிலேயேதான் மோடியின் அமைச்சரவையில் அவர் இடம்பெறவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது.

மோடி அமைச்சரவையில் யாருக்கு 2-வது இடம் என்பதில் 5 ஆண்டுகாலமும் ராஜ்நாத்சிங்குக்கும் அருண்ஜேட்லிக்கும் பனிப்போர் நீடித்தது. உடல்நலக் குறைவால் சுஷ்மா ஸ்வராஜ் முன்னரைப் போல கட்சிப் பணிகளில் ஆக்டிவ்வாக இல்லை.
ஒருகால கட்டத்தில் பாஜகவின் பிரசார பீரங்கியாக வலம் வந்த உமபாரதியின் இடத்துக்கு சர்ச்சைக்குரிய சாத்வி பிரக்யாசிங் கொண்டுவரப்ப்பட்டுவிட்டார். இந்நிலையில் பாஜக கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களில் வெல்லும் என்கின்றன தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள்.
அப்படி மோடி மீண்டும் பிரதமராகவும் அமித்ஷா கட்சித் தலைவராகவும் நீடித்தால் மேலும் பல மூத்த தலைவர்கள் கட்சியில் ஓரம்கட்டப்பட வாய்ப்பிருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள். மத்திய அமைச்சர்களான ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், உமாபாரதி என பாஜகவின் முகங்களாக வலம் வந்தவர்கள் அத்தனை பேரும் அக்கட்சியின் 'மூத்தோர்' குழுவுக்கு தூக்கியடிக்கப்படுவர்.
மேலும் சாத்வி பிரக்யாசிங் போன்ற தடாலடி நபர்கள்தான் மோடியின் அமைச்சரவை முகங்களாக வலம் வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications