மத்திய அரசு தனது பணியை சரியாகச் செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது - ராகுல்காந்தி
மத்திய அரசு தனது பணியை சரியாகச் செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசு உதவி பெருவது வேதனையளிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.மத்திய அரசு தனது பணியை சரியாகச் செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரியும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரியும் 4ஆயிரம் பேர் வரை உயிரிழந்து வருகின்றனர்.
இந்தியாவிற்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், அயர்லாந்து, பெல்ஜியம், ரோமானியா, சிங்கப்பூர், ஸ்வீடன், குவைத் ஆகிய நாடுகள் மருத்துவ உதவி செய்து வருகின்றன. மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்றவை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விமானம் மூலம் வருகின்றன.
இந்த நிலையில் வெளிநாட்டு உதவிகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்கு ட்விட்டரில் கடந்த சில நாட்களுக்கு முன் கேள்விகளை எழுப்பி இருந்தார். அதில், இந்தியாவுக்கு வெளிநாடுகள் அளிக்கும் உதவிகள் குறித்து சில கேள்விகளைக் கேட்கிறேன்.
என்ன மாதிரியான மருத்துவ உபகரணங்களை இந்தியா வெளிநாடுகளில் இருந்து பெற்றது?, இந்த மருத்துவ உபகரணங்கள், நிதியுதவியால் யார், எந்த மாநிலம் பயன்பெற்றது? எவ்வாறு, எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கு உதவிகள் ஒதுக்கப்பட்டன? என்று கேள்வி எழுப்பினார். வெளிநாட்டு உதவிகள் பற்றி ஏன் வெளிப்படைத் தன்மை இல்லை?, மத்திய அரசிடம் இருந்து ஏதாவது பதில் இருக்கிறதா என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, வெளிநாட்டு உதவிகளைப் பெறும் மத்திய அரசுக்கு மீண்டும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
லாக்டவுன்...குடிமகன்கள் மூர்க்கத்தனமாக முற்றுகை...2-வது நாளாக டாஸ்மாக் மதுகடைகள் விற்பனை ரூ.428 கோடி
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா நோயைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெற்றுள்ளது மத்திய அரசு. வெளிநாடுகளில் இருந்து உதவியைப் பெற்றுக் கொண்டு மத்திய அரசு மார்தட்டி பெருமை கொள்வது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார். மத்திய அரசு தனது பணியை சரியாகச் செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.