உஷார்.. இந்தியாவில்.. ஜஸ்ட் ஒரே நாளில் இரு மடங்காக உயர்ந்த கொரோனா கேஸ் எண்ணிக்கை.. எவ்வளவு தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 775 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் மூன்றாவது அலைக்கான அறிகுறிகள் தொடங்கி உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
2020ஆம் ஆண்டு இந்தியாவில் கண்டறியப்பட்ட கோரொனா தொற்று பாதிப்பு தற்போது வரை அடுத்தடுத்த ஆண்டில் இரண்டு அலைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு மூன்றாவது அலையை எதிர்நோக்கியுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பிப்ரவரி மாதம் கொரோனா 3வது அலை உச்சமடையும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்பட்டது.

கொரோனா பாதிப்பு
இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி 9 ஆயிரத்து 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை திடீரென 13 ஆயிரத்து 154 உயர்ந்தது.நாட்டில் நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை திடீரென 13,154 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் கோரோனா பாதித்தவர்களின் எணிக்கை 16 ஆயிரத்து 764 ஆக பதிவாகி இருந்தது.

பாதிப்பு எவ்வளவு?
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மீண்டும் தொற்று இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது. இதன்படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 22,775 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சம் கடந்து உள்ளது. இதன்படி 1,04,781 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று 91,361 ஆகவும், நேற்று முன்தினம் 82,402 ஆகவும் இருந்தது. இன்று 8,949 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பி சென்றுள்ளனர். இதன் காரணமாக இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.32% ஆக உள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கை
இதேபோன்று உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. கொரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 406 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று 220 பேர், நேற்று முன்தினம் 268 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4,81,080ல் இருந்து 4,81,486 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த சூழலில், நேற்று முன்தினம் 10 ஆயிரம் எண்ணிக்கையை கடந்து பாதிப்புகள் பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது. நேற்று 15 ஆயிரம் கடந்து இருந்தது. இந்நிலையில், பாதிப்பு எண்ணிக்கை இன்று 20 ஆயிரம் கடந்து உள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை பிப்ரவரி மாதத்தில் உச்சத்தை எட்டும் என நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்து இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை மும்பை டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு பல மடங்கு வேகத்தில் முன்னேறி வருகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது அலையை எதிர்க்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும், ஏற்கனவே குறிப்பிட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications