நிச்சயம் நடைபெறும்..நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை.. சுகாதார துறை இணை அமைச்சர் திட்டவட்டம்
டெல்லி: கொரோனா 3ஆம் அலை உள்ளிட்ட காரணங்களால் நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி ப்ரவின் பவார், தகுந்த முன்னேற்பாடுகளைப் பின்பற்றித் தேர்வுகள் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாகப் பல மாதங்களாகப் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாட்டில் மூடப்பட்டுள்ளன. பாடங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் தான் கொரோனா 2ஆம் அலை காரணமாக நாட்டில் +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும், அப்போது நீட் தேர்வு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

நீட் தேர்வு
கடந்த சில வாரங்களுக்கு முன் நீட் தேர்வு வரும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். நீட் எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார், கொரோனா 3ஆம் அலை உள்ளிட்ட காரணங்களால் நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் ஏதேனும் மத்திய அரசுக்கு உள்ளதா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

ரத்து செய்யும் திட்டம் இல்லை
மேலும், நீட் தேர்வை நடத்துவது என மத்திய அரசு முடிவு செய்திருந்தால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நிலை பாதுகாக்க அரசு வைத்துள்ள திட்டம் என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு மத்திய குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி ப்ரவின் பவார் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், "நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. திட்டமிட்டபடி செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும்.

அட்மிட் கார்டில் இ பாஸ்
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றி, தனிமனித இடைவெளியை முறையாகக் கடைப்பிடித்துத் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேர்வு நடைபெறும் நகரங்களும் மையங்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் எந்தவொரு இடைஞ்சலும் இல்லாமல் செல்வது உறுதி செய்ய நீட் அட்மிட் கார்டில் இ பாஸ் இணைக்கப்படும்.

வெப்ப நிலை
தேர்வு எழுத அனுமதிக்கப்படும் முன், அனைத்து மாணவர்களின் உடல் வெப்பம் சோதிக்கப்படும். வெப்பநிலை அதிகமாக உள்ள மாணவர்கள் தனி ஆய்வகத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க், அணிந்திருக்க வேண்டும். சானிடைசர், பிபிஇ சாதனம் உள்ளடக்கிய உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதேபோல தேர்வு மையத்திற்கு வெளியே இருக்கும் கூட்டத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications