கத்திரிக்காய் கடித்த திரிணாமூல் எம்பி.. லோக்சபாவில் சுவாரஸ்யம்! என்ன காரணம்?
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கத்திரிக்காயை பச்சையாக கடித்து காட்டி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஒருவர் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
கடந்த 19ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரானது, அமளியுடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விலைவாசி உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணத்தால் அவர் இது குறித்து விளக்கமளிக்கவில்லை. இது தொடர்பாக பாஜக தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்ட பின்னரும், எதிர்க்கட்சிகள் அமளியை தொடர்ந்தனர்.
6 பேர் இறந்த அதே இடம்.. ரயில்போல் பின்னிய 15 வாகனங்கள்! செங்கல்பட்டு அருகே சினிமாவை மிஞ்சும் விபத்து
தொடர் அமளி
தொடர் அமளி காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் திங்கட்கிழமைதான் கூட்டத்தொடர் மீண்டும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று கூடிய நாடாளுமன்றம் கூச்சல் குழப்பத்துடன்தான் நடைபெற்றது. தொடக்கம் முதல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கூடிய நிலையில், அமளி ஓயாததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸ்
பின்னர் மீண்டும் அவை கூடிய நிலையில், 'திரிணாமுல் காங்கிரஸ்' எம்.பி 'ககோலி கோஷ் தஸ்திதர்க்கு' பேச அனுமதி வழங்கப்பட்டது. தனது உரையில் விலைவாசி உயர்வு குறித்து ககோலி மத்திய அரசை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது, "விலைவாசி உயர்வு குறித்து பேசி விவாதிக்க அனுமதிக்கப்பட்டதற்கு முதலில் நன்றியை கூறிக்கொள்கிறேன். கடந்த சில மாதங்களில் எல்பிஜி சிலிண்டர் விலை நான்கு முறை உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.600லிருந்து இப்போது ரூ.1,100 ஆக அதிகரித்துவிட்டது." என்று விமர்சித்தார்.
கத்திரிக்காய்
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த மாதம் அதாவது, ஜூலையில் சிலிண்டருக்கு மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டது. கடந்த ஓராண்டில் 8வது முறை இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே விலையை உடனடியாக குறைக்க வேண்டும்." என்று கூறினார். மேலும், "நாங்கள் பச்சை காய்கறியை சாப்பிட வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறதா?" என ஆவேசமாக கேட்ட ககோலி, பின்னர் திடீரென ஒரு கத்திரிக்காயை எடுத்து கடிக்கத் தொடங்கிவிட்டார். பின்னர் மீண்டும் "சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். இது எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் மட்டுமல்லாது பாஜக எம்.பிக்களிடையேயும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
அமளி
முன்னதாக கூட்டத்தொடர் தொடங்கிய சில நாட்களில், விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 4 எம்.பிக்கள் கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவைத்தலைவரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று இந்த நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது. முன்னதாக இந்த கூட்டத்தொடரில் பதாகைகள், ஆவேசமான சில சொற்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த மக்களவை செயலகம் தடைவிதித்திருந்தது.
தற்போதைய நிலையில் இந்தியாவில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் இணைப்பை பெறுவோருக்கு மட்டுமே மானியத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.