குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி உறுதி.. இதோ டேட்டா!
டெல்லி: டெல்லியில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் துணை குடியரசு தலைவர் தேர்தலில், பாஜக வேட்பாளரான ஜெகதீப் தன்கருக்கு 515 எம்பிக்களின் ஆதரவு கிடைத்துள்ளதால், கிட்டத்தட்ட அவரது வெற்றி உறுதியாகி விட்டது.
ஜனநாயக நாடான இந்தியாவில் சமீபத்தில் நடந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்றார்.
தற்போது நாட்டின் துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு பதவி வகித்து வருகிறார். நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபா தலைவராகவும் செயல்பட்டு வரும் இவரது பதவிக்காலம் வருகிற 10-ந் தேதியுடன் முடிவடைகிறது.
இதன் காரணமாக 10-ந்தேதிக்கு முன்பு புதிய துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டது. இதையடுத்து இன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகள் முழு அளவில் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நடைபெறும் துணை குடியரசு தலைவர் தேர்தலில், நாடாளுமன்றத்தின் லோக் சபா மற்றும் ராஜ்ய சபா எம்.பி.க்கள் மொத்தம் 788 பேர் ஓட்டு போட இருக்கிறார்கள். இதற்கான வாக்குப்பதிவு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

யாருக்கு வெற்றி வாய்ப்பு?
இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக 71 வயதான மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் கவர்னர் ஜெகதீப் தன்கர் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து போட்டி வேட்பாளராக எதிர்க்கட்சிகளின் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டுள்ளார். இதில் ஜெகதீப் தன்கருக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என பேசப்படுகிறது. ஏனெனில் லோக் சபா மற்றும் ராஜ்ய சபா எம்பிக்களின் எண்ணிக்கை ஆளும் பாஜனதா கூட்டணிக்கே இருப்பதால் இந்த துணை குடியரசு தேர்தலில் ஜெகதீப் தன்கர் எளிதில் வெற்றி பெறுவார் என தெரிகிறது.

கூட்டணி அல்லாத கட்சிகளும் ஆதரவு
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிட்டாலும், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலை புறக்கணிப்பது அவருக்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதேபோல் ஆளும் பாஜனதா கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தன்கருக்கு அதிக எம்பிக்கள் ஆதரவு உள்ளதால் அவரே வெற்றி பெற வாய்ப்புள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு இருக்கும் நிலையில், கூட்டணியில் இடம்பெறாத பகுஜன் சமாஜ் மற்றும் பிஜூ ஜனதாதளம் கட்சிகளும் ஜெகதீப் தன்கருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவர் வெற்றி பெறுவது கிட்டட்தட்ட உறுதிதான்.

515 வாக்குகள் பெறுவார்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் உள்ள 788 எம்பிக்களில் தேசிய ஜனநாய கூட்டணிக்கு 515 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. பாஜக, ஏக்னாட் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஜெகதீப் தன்கருக்கே ஆதரவு தெரிவிப்பதால் அவரது வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த துணை குடியரசு தேர்தலில் கூட வெங்கையா நாயுடுவுக்கு 516 எம்பிக்கள் ஓட்டு போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை தெரிந்துவிடும்
துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று காலை 10 மணிக்கு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு தொடங்குகிறது. தொடர்ந்து எந்த கால இடைவெளியும் இல்லாமல் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. வாக்குப்பதிவு முடிந்த அடுத்து சில நிமிடங்களிலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக, அதாவது இன்று மாலையிலேயே வெற்றி பெறுவது யார் என்பதை அறிவித்துவிடுவர். அதன்படி நாட்டின் புதிய துணை குடியரசு தலைவர் யார் என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications