நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கு..ஆஜரான ராகுல்..அமலாக்கத்துறை முன் ஆர்பாட்டம் செய்த தலைவர்கள் கைது
அமலாக்கத்துறையை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அசோக் கெலோட் டெல்லி பதேப்பூர் காவல் நிலையத்துக்கு போலீஸ் அழைத்து சென்றது.
டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். தடையை மீறி பேரணியாக சென்று ஆர்பாட்டம் நடத்திய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கைது செய்யப்பட்டார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கொரோனா பாதிப்பு தீவிரம்- டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி திடீர் அனுமதி
ராகுல்காந்தி ஆஜர்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி இன்று ஆஜராக உள்ளார்.
காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு
அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விசாரணை நடைபெறுவதாகவும், ஆளும் கட்சி மத்திய அமைப்புகளை சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. நாடு முழுவதும் அமலாக்கதுறை அலுவலகம் முன்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
சத்தியாகிரக பேரணி
அந்த வகையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முதல் அமலாக்கத்துறை அலுவலகம் வரை சத்தியாகிரக பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இதில், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்கவிருந்தனர்.
தடையை மீறி பேரணி
இந்நிலையில், இந்த பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பேரணியால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தினால் அனுமதி மறுக்கப்படுவதாக போராட்ட ஒருங்கிணைப்பு குழுவுக்கு டெல்லி காவல்துறை இணை ஆணையர் அம்ருத்தா குகுலோத் கடிதம் அனுப்பியுள்ளார். எனினும், திட்டமிட்டபடி இன்று காலை சத்தியாகிரக பேரணி நடத்தப்படும் என்றும் கட்சியினர் அனைவரும் தலைமை அலுவலகத்துக்கு வரும்படியும் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுப்பட்டது.
அசோக் கெலாட் கைது
தடையை மீறி ஏராளமானோர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்க வந்த ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றார் இதனையடுத்து தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி பேரணியாக சென்று ஆர்பாட்டம் நடத்திய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அசோக் கெலாட் டெல்லி பதேப்பூர் காவல் நிலையத்துக்கு போலீஸ் அழைத்து சென்றது.