அனைத்து வகை மத்திய அரசு பணிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு.. மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு
டெல்லி: அனைத்து வகையான மத்திய அரசு பணியிடங்கள் மற்றும் பொதுத் துறை வங்கி பணியிடங்களுக்கான ஆள் தேர்வுக்கு, ஒரே பொது தகுதி தேர்வு (சிஇடி) கொண்டுவரப்படும் என்றும், இதற்காக, தேசிய பணியாளர் தேர்வு ஏஜென்சி (என்.ஆர்.ஏ) அமைக்கப்படும் என்றும் மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
இதுபற்றி அமைச்சரவை செயலாளர் சந்திரமௌலி நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் பணியாளர் தேர்வுகள் பல்வேறு கால அட்டவணைகள், விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் பல்வேறு கட்டண விகிதங்களை கொண்டுள்ளன. உள்கட்டமைப்பு சவால்கள் காரணமாக பெரும் முறைகேடுகள் நடைபெறுகின்றன.
இந்த சவால்களை முறியடிப்பதற்காகதான் தேசிய பணியாளர் தேர்வு ஏஜென்சி அமைக்கப்படுகிறது.
"அரசே நடத்தும் கல்விக் கொலைகள்.." ஸ்டாலின் கடும் கண்டனம்.. சுபஸ்ரீ பெற்றோரிடம் ஆறுதல்
ஒரே தேர்வு அமைப்பு
குரூப் பி, குரூப் சி போன்ற மத்திய அரசின் பணியிடங்களுக்கு ஒவ்வொரு வருடமும் சுமார் 3 கோடி பேர் விண்ணப்பிக்கிறார். ஒன்றேகால் லட்சம் அளவுள்ள பணியிடங்களுக்கு இத்தனை பேர் விண்ணப்பங்கள் செய்கிறார்கள். வெவ்வேறு தேர்வு வாரியத்தின் மூலமாக பணியாளர்களை தேர்வு செய்வதற்கு பதிலாக, தேசிய பணியாளர் தேர்வு ஏஜென்சி என்ற ஒற்றை அமைப்பு மூலமாக இனிமேல் பணியாளர் தேர்வு நடைபெறும். இது ஒரு மிக முக்கியமான சீர்திருத்தம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அலைச்சல் தேவையில்லை
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பேட்டியில், பணியாளர் தேர்வு, பணியாளர் பணியிட உத்தரவு போன்றவை இனிமேல் எளிமையாகும். அதே போல, ஏழைகள் மற்றும் பெண்கள் அதிக தூரம் பயணித்து தேர்வு எழுதுவதற்கு சிரமப்படுவதை இந்த நடைமுறை எளிமையாக்கும் என்று தெரிவித்தார்.
தனித்தனி கட்டணம்
தற்போதைய சூழ்நிலையில் ஒரேமாதிரி தகுதி இடங்கள் கொண்ட பல்வேறு மத்திய அரசின் பணிகளாக இருந்தாலும், வெவ்வேறு வகையான தேர்வுகளை எழுத வேண்டிய தேவை உள்ளது. இதனால், ஒவ்வொரு தேர்வுக்கும், தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அது மட்டுமின்றி வெவ்வேறு தேர்வு மையங்களுக்கு பயணப்படுவதற்கு அவசியம் உள்ளது. ஆனால் ஒரே தேர்வு அமைப்பு வந்தால் இந்த செலவினம் மற்றும் அலைச்சல் மிச்சம் ஆகும். முதல்கட்டமாக நாடு முழுக்க ஆயிரம் தேர்வு மையங்களை அமைத்து பொது தேர்வு நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Recommended Video
தேர்வு முறைகள்
குரூப் பி மற்றும் குரூப் சி (தொழில்நுட்பமற்ற) பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய என்.ஆர்.ஏ, பொது தேர்வு நடத்தும். என்.ஆர்.ஏ ரயில்வே அமைச்சகம், நிதி அமைச்சகம் / நிதி சேவைகள் துறை, பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி), ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி) மற்றும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.