பணத்திற்காகக் கடற்படை ரகசியங்கள் லீக்.. கமாண்டர் உட்பட 6 பேர் மீது.. சிபிஐ குற்றப்பத்திரிக்கை
டெல்லி: நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசியத் தகவல்களைப் பணத்துக்காக விற்றதாகக் கடற்படை அதிகாரி உள்ளிட்ட 6 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சர்வதேச அளவில் வலுவான கடற்படையைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். விமானம் தாங்கி போர்க் கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் என இந்தியாவின் கடற்படை வலுவானது.
பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக நல்ல ஒரு உறவு உள்ளது. இதனால் இந்தியா கடற்படையின் பெரும்பாலான கப்பல்கள் ரஷ்யாவிடம் இருந்தே பெறப்பட்டதாகும்.

ரகசிய தகவல்கள்
அப்படி ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களில் Kilo class நீர்மூழ்கிக் கப்பல்கள் முக்கியமானவை. இந்நிலையில், இந்த நீர்மூழ்க்கிப் கப்பல் தொடர்பான முக்கிய தகவல்களை இந்தியக் கடற்படையைச் சேர்ந்தவர்கள் பணத்திற்காக விற்றதாகப் புகார் எழுந்தன. இது தொடர்பாக இதுவரை சர்வீர்ஸ இருக்கும் கடற்படை தளபதி ஒருவர், 2 ஓய்வு பெற்ற அதிகாரிகள் உட்பட 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. அவர்கள் ஆறு பேர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவில் வெளியாகியுள்ளன.

5 பேர் கைது
இந்நிலையில், இவர்கள் 6 பேரும் மீதும் சிபிஐ தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இந்தியாவின் கிலோ கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்களின் ரகசியத் தகவல்களைப் பணத்திற்காக விற்றுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலில் கடந்த செப். 3ஆம் தேதி ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் ரன்தீப் சிங் மற்றும் எஸ்.ஜே.சிங் ஆகியோர் சிபிஐ கைது செய்தது. அவர்கள் மீது முதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

ரூ 2 கோடி ரொக்கம் மீட்பு
இதையடுத்து ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உட்பட மூன்று இயக்குநர்கள் மீது இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரன்தீப் சிங்கின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ₹ 2 கோடி ரொக்கம் மீட்கப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கடற்படை தளபதி அஜித்குமார் பாண்டே உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

குற்றப்பத்திரிக்கை
இந்த இரண்டு தளபதிகளும், வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளுக்கு, கிலோ கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்த ரகசியத் தகவல்களை அனுப்பியாக சிபிஐ குற்றஞ்சாட்டுகின்றது. கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்கக் கூடாது என்பதற்காக சிபிஐ இன்று விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இது குறித்த அடுத்தகட்ட விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு நேரடியாகத் தொடர்புடைய சம்பவம் என்பதால் சிபிஐ உள்ள உயர்மட்ட அதிகாரிகளிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications