குடியரசு தலைவர் தேர்தல்.. திரெளபதி முர்முவின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்த பூர்வீக கிராம மக்கள்
புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், பா.ஜனதா வேட்பாளர் திரெளபதி முர்மு வெற்றி பெற வேண்டி அவரது சொந்த மாநிலமான ஒடிசாவில் பொதுமக்கள் இறைவழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை வருகிற 21-ந் தேதி (வியாழன்) காலை டெல்லியில் நடைபெறுகிறது. அப்போது வெற்றி பெற்றவர் யார் என்று அறிவிக்கப்படுவார்.

வெற்றி வாய்ப்பு யாருக்கு
ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் வெற்றி பெறும் புதிய ஜனாதிபதி வருகிற 25-ந்தேதி பதவி ஏற்பார். தற்போதைய சூழ்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கே குடியரசுத்தலைவர் ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இறைவழிபாட்டில் கிராமத்தினர்
இதனிடையே, திரெளபதி முர்மு வெற்றி பெற வேண்டி அவரது சொந்த கிராமத்து பழங்குடியின மக்கள் இறைவழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய முறைப்படி தங்களது இஷ்ட தெய்வத்தை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வருகின்றனர். திரெளபதி முர்முவின் கிராமத்தினர் இறைவழிபாட்டில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

அரசியல் ஆர்வம்
ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்டாபோசி என்ற கிராமத்தில் கடந்த 1958-ம் ஆண்டு ஜூன் 20-ந் தேதி பிறந்த திரௌபதி முர்மு சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர். ஜார்கண்டில் அதிக அளவில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அரசியல் ஆர்வத்தினால் பா.ஜ.க.வில் சேர்ந்த திரௌபதி முர்மு ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

முதல் பழங்குடியின குடியரசுத்தலைவர்
ஒடிசாவில் பா.ஜ.க., பிஜு. ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் ,கால்நடை வளர்ச்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்து இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மே 18-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி வரை ஜார்க்கண்ட் ஆளுநராக பதவி வகித்தார். இதனால் ஜார்கண்டின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் திரௌபதி முர்மு பெற்றார். குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த முதல் குடியரசு தலைவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கும்.












Click it and Unblock the Notifications