ரத்த வெள்ளத்தில் மிதந்த ரிஷப் பண்ட்.. வீடியோ எடுக்காதீங்க ப்ளீஸ்னு கெஞ்சிய கொடூரம்.. மனிதம் எங்கே?
டெல்லி: உத்தரகண்ட் அருகே கார் விபத்தில் சிக்கி ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் நின்றிருந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டிற்கு உதவிகளை செய்யாமல் நிறைய இளைஞர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து ரிஷப் தானே ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மருத்துவமனைக்கு சென்றார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். இவர் தனது தாயுடன் புத்தாண்டை கொண்டாட விரும்பினார். இதற்காக உத்தரகண்டில் இருந்து டெல்லிக்கு சாலை மார்க்கமாக காரில் தனியே புறப்பட்டார்.
இன்று காலை 5.30 மணி அளவில் உத்தரகண்ட் மாநிலம் ஹம்மாத்பூர் ஜால் அருகே ரூர்க்கின் நர்சன் எல்லையில் இவரது கார் சென்று கொண்டிருந்தது. மிகவும் வேகமாக சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள டிவைடரில் போய் மோதியது.

சமயோஜிதம்
இதில் கார் தீப்பிடித்தது. உடனே சமயோஜிதமாக செயல்பட்ட பண்ட், கார் கண்ணாடியை உடைத்து கொண்டு சாலையில் குதித்தார். இதன் பிறகு இவரது கார் முற்றிலுமாக எரிந்தது. தீப்பிடித்தபடியே கார் தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப்பிற்கு முதுகு, தலை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

சாலையில் தனியே நின்ற ரிஷப்
அதிகாலை வேளை என்பதால் சாலையில் தன்னந்தனியே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு ஓடி வந்தனர். அவர்களிடம் நான் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ரத்தம் சொட்டியபடியே நின்று கொண்டிருந்த ரிஷப்பிற்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.

பர்ஸை கொள்ளையடித்த நபர்கள்
மாறாக அவரது பணம், பர்ஸ் ஆகியவற்றை கொள்ளையடித்துச் செல்வதிலேயே குறியாக இருந்தனர். கொள்ளையடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரிஷப் பண்ட் இனி யாரும் நமக்கு உதவ மாட்டார்கள் என கருதி தானே ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மருத்துவமனைக்கு சென்றார்.

மனம் வருந்திய நெட்டிசன்கள்
இந்த தகவலறிந்த நெட்டிசன்கள் மனம் வருந்தி பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். விபத்து நடந்த போதிலும் ரத்தம் சொட்ட சொட்ட ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளார். 25 வயது இளைஞருக்கு பாராட்டுகள், இவர்தான் உண்மையான போராளி என தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் விபத்தில் ரிஷப் பண்ட் பிழைத்துவிட்டார், மனிதநேயம் இறந்துவிட்டது என பதிவிட்டிருந்தனர்.

ரத்த களறியான ரிஷப் பண்ட்
விபத்தில் சிக்கிய ரிஷப் பண்டை சிலர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதில் ரிஷப் பண்டின் வீடியோவை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது. அவருக்கு ரத்தம் வருகிறது. வீடியோ எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஒரு உயிரை காப்பாற்றாமல் அவரது பணத்தை திருடி செல்லும் நபர்களை நினைத்தால் வெட்கமாக இருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

உள்ளூர் மக்கள் உதவி
மற்றொரு வீடியோவில் ரத்தத்தில் நனைந்துள்ள ரிஷப் பண்டிற்கு உள்ளூர் மக்கள் கம்பளியை கொடுத்து உதவியுள்ளனர். அது போல் அவ்வழியாக சென்ற ஹரியானா மாநில பேருந்தின் டிரைவரும் நடத்துவரும் ரிஷப்பை காரில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். மருத்துவமனைக்கு சென்ற பண்ட் சுயநினைவுடன் இருந்தார். அவரிடம் மருத்துவர்கள் பேசியுள்ளனர். மேலும் கார் ஓட்டும் போது திடீரென கண் அசந்துவிட்டதாகவும் இதனால் கார் நிலைத்தடுமாறி டிவைடரில் மோதிவிட்டதாகவும் பண்ட் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications