400 சீட்டுகளுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் “உலகம் மிரளும்” பயங்கர ஆபரேஷன்? நூல்விடும் 'தலைகள்’!
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜக 400 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தால் உலக நாடுகளை அதிர வைக்கும் மெகா ஆபரேஷனை மேற்கொள்ளப் போகிறது என்பதையே மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் சுட்டிக் காட்டி வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
18-வது லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெல்வதே இலக்கு என்பதுதான் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரின் தொடர் பேச்சு. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களோ 400 இடங்களில் பாஜக வெல்லவே முடியாது என திட்டவட்டமாக கூறுகின்றனர்.

ராஜ்நாத் சிங் ஆவேசம்: இன்னொரு பக்கம் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் குறித்து தொடர்ந்து பேசுகின்றனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்போம் என்கிறார். மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களின் போராட்டங்கள் குறித்து பேசி வருகிறார்.
பரூக் அப்துல்லா பதிலடி: இதற்கு பதிலடி தந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பாகிஸ்தான் ஒன்றும் வளையல் போட்டுக் கொண்டு இருக்கவில்லை. உங்களால் முடிந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றுங்கள்.. பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் இந்தியா மீதுதான் விழும் என்றார்.
மோடி கண்டனம்: இதனை கண்டித்துப் பேசிய பிரதமர் மோடி, "இந்தியா" கூட்டணி தலைவர்கள் பாகிஸ்தான் மொழியில் பேசுகின்றனர்.. பாகிஸ்தானுக்கு நாம் வளையல் போடத்தான் போகிறோம்.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள், இந்தியாவுடன் இணையவே விரும்புகின்றனர் என்றார்.
ஹிமந்த பிஸ்வா சர்மா: இதன் உச்சகட்டமாக பாஜக மூத்த தலைவரும் அஸ்ஸாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்தியில் 400 இடங்களுக்கு மேல் வென்று பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைத்தே தீருவோம் என வெளிப்படையாக பேசி இருக்கிறார். மேலும் ராமர் கோவில் கட்டப்பட்ட போது மதுரா, ஞானவாபியில் மசூதிகள் இருக்கும் இடங்களில் கோவில்கள் கட்டுவோம் என்கிறார் ஹிமந்த பிஸ்வா சர்மா.
காஷ்மீர் பிரச்சனையும் பாஜகவும்: 2019-ம் ஆண்டு மத்தியில் 2-வது முறையாக பாஜக ஆட்சி அமைத்தவுடன் 70 ஆண்டுகாலம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசனத்தின் 370-வது சரத்தின் கீழான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலமே இரண்டாக உடைக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 5 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமல் ஜனாதிபதி ஆட்சியே நீடித்து வருகிறது. மேலும் பாஜக ஆட்சியில்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதாக வரைபடங்கள் வெளியிடப்பட்டன. தற்போது 3-வது முறையாக ஆட்சி அமைத்தால் உலக நாடுகள் அதிரும் வகையில் 75 ஆண்டுகளாக பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருக்கும் காஷ்மீர் பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கும் ஆபரேஷனை பாஜக அரசு மேற்கொள்ளக் கூடும் என்பதே இந்த பிரசாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications