ஓமிக்ரான் தொற்று அதிகரிப்பு எதிரொலி... அமெரிக்கா, இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடு
டெல்லி: ஓமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்தியா உள்பட அனைத்து நாட்டு பயணிகளுக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
கோவிட் 19 நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்திருந்தால் அதற்கான ஆதாரத்தை கட்டாயம் எடுத்து வரவேண்டும் என இரண்டு நாடுகள் புதிய விதியை வகுத்துள்ளன.
இந்த புதிய நடைமுறைகள் அமெரிக்காவில் டிசம்பர் 6ம் தேதியும், இங்கிலாந்தில் டிசம்பர் 7ம் தேதியும் அமலுக்கு வருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

30 நாடுகளில் ஓமிக்ரான் பாதிப்பு
நவம்பர் 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நாடுகளும் விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. எனினும், இந்த நடவடிக்கை பெரியளவில் பலன் தந்ததாகத் தெரியவில்லை. சமீபத்திய கணக்கெடுப்பின்படி சுமார் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஓமிக்ரான் பரவிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஓமிக்ரான் பரவுவதை தீவிரமாக தடுக்கும் பொருட்டு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

அமெரிக்காவில் டிச. 6 முதல் விதிகள்
இந்நிலையில் இந்தியா அல்லது வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளில் 2 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கெரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருக்க வேண்டும் என அமெரிக்கா கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடைமுறைகள் டிசம்பர் 6ம் தேதி இந்திய நேரப்படி காலை 10.31 மணிக்கு மேல் புறப்படும் அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் 24 மணிநேரத்திற்குள் பெறப்பட்ட கோவிட்-19 நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஒரு நாளைக்கு மேல் எடுக்கப்பட்ட நெகட்டிவ் சான்றிதழ் செல்லாது எனவும் அந்த விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை கடந்த 90 நாட்களுக்குள் கொரோனா வந்து குணமாகி இருந்தால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

டிச. 7 முதல் யு.கே.வில் புதிய விதிகள்
இங்கிலாந்தில் இந்த புதிய நடைமுறைகள் டிசம்பர் 7ம் தேதி இந்திய நேரப்படி காலை 4 மணி முதல் புறப்படும் அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்தியா உள்பட வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் அனைத்து பயணிகளும் ஆர்டி பிசிஆர் அல்லது கோவிட் 19 பரிசோதனை எடுத்து நெகட்டிவ் முடிவுகள் வைத்திருக்க வேண்டும். மேலும் இங்கிலாந்திற்கு செல்லும் 2 நாட்களுக்குள் அந்த சோதனை எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு இந்த விதிமுறைகள் கட்டாயம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 11 வயது மற்றும் அந்த வயதுக்கு குறைவான சிறுவர்கள், குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பரிசீலனை செய்யுமா?
இந்த முடிவுக்குப் பிரிட்டன் விமான நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி விமான பயணங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் உள்ளதாக விமர்சித்துள்ளன. இது தொடர்பான முடிவை டிசம்பர் 20ஆம் தேதி இங்கிலாந்து அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை இங்கிலாந்தில் 160 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை 20 பேருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications