பிஎப்ஐ-க்கு நெருக்கடி: 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ.ரெய்டு.. இன்றும் 100-க்கும் மேற்பட்டோர் அதிரடி கைது!
டெல்லி: கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த அதிரடி சோதனைகளின் போது இன்றும் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். வெளிநாடுகளின் நிதி உதவியைப் பெற்று பயங்கரவாத செயல்களுக்கு இந்த அமைப்பு துணை போகிறது என்பது இந்துத்துவா அமைப்பினர் குற்றச்சாட்டு.
இந்நிலையில் கடந்த 22- ந் தேதி நாட்டின் 15 மாநிலங்களில் பி.எப்.ஐ. இயக்க நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட 93 இடங்களில் மாநில போலீசாரின் ஒத்துழைப்புடன் மெகா ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டுகளின் போது அந்த இயக்கத்தின் 106 தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாதத்துடன் தொடர்பு?
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, உ.பி., ராஜஸ்தான், டெல்லி, அஸ்ஸாம், ம.பி, மகாராஷ்டிரா, கோவா, மேற்கு வ்ங்கம், பீகார் மற்றும் மணிப்பூரில் இந்த சோதனை நடைபெற்றது. பயங்கரவாத இயக்கங்கள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பி.எப்.ஐ. நிதி உதவி செய்கிறது என்ற புகாரின் அடிப்படையில் இச்சோதனைகள் நடத்தப்பட்டன.

8 மாநிலங்களில் மீண்டும் சோதனை
தற்போது 2-வது முறையாக மீண்டும் 8 மாநிலங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் மீரட்டின் பல இடங்களில் நேற்று இரவே பலரும் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர். அஸ்ஸாமில் இன்று காலை சோதனையை தொடங்குவதற்கு முன்னரே பி.எப்.ஐ. நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.

புனேவில் விசாரணை
கர்நாடகாவில் பல இடங்களில் இன்று 2-வது முறையாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. புனேவில் நடத்தப்பட்டு வரும் சோதனையில், பயங்கரவாத இயக்கங்களுடனான தொடர்பு குறித்து 6 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த அமைப்பு விரைவில் தடை செய்யப்படக் கூடும் என கூறப்பட்டு வரும் நிலையில் 2-வது சோதனை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

100-க்கும் மேற்பட்டோர் கைது
மேலும் இன்று 8 மாநிலங்களில் நடைபெற்ற சோதனைகளின் போது 100-க்கும் மேற்பட்ட பி.எப்.ஐ. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவில் 60; அஸ்ஸாமில் 8; மகாராஷ்டிராவில் 6 ; டெல்லியில் 30; உ.பி.யில் 10; ம.பி.யில் 21 பி.எப்.ஐ. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications