இந்திய பொருளாதாரம் சரியான ரூட்டில் போகிறது.. நிர்மலா உறுதி.. அம்ரித்கால் என்றாரே என்ன தெரியுமா?
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அம்ரித் காலின் முதல் பட்ஜெட் எனவும் அவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருக்கிறார். அம்ரித் கால் என்றால் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி சரியான பாதையில் பட்ஜெட் சென்றுகொண்டு இருப்பதாக கூறி உள்ளார். அம்ரித் காலின் முதல் பட்ஜெட் எனவும் அவர் கூறி இருக்கிறார். இந்த அம்ரித் கால் என்றால் என்ன?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் 2023 - 24 நிதியாண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார். இன்று தனது உரையை தொடங்கிய அவர், மத்திய பாஜக அரசின் திட்டங்கள், செயல்முறைகளை சுட்டிக்காட்டி பெருமிதம் தெரிவித்தார்.
அவர் தனது உரையில், "இந்த பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சி வகித இலக்கான 6.8 சதவீதத்தை அடைய உதவும். பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி, விவசாயிகள் மற்றும் பெண்களின் நலனுக்காக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது." என்றார்.
அம்ரித் கால் என்றால் என்ன?
பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியா திட்டத்தை சுட்டிக்காட்டி "அம்ரித் காலின் முதல் பட்ஜெட் இதுதான்." என்று நிர்மலா சீதாராமன் கூறினார். அம்ரித் கால் என்பதன் அர்த்தம் "அமிர்த காலம்" என்பதாகும். வேதகால ஜோதிடத்தில் இருந்து வந்த வார்த்தை இது. மோடி தெரிவித்து வரும் புதிய இந்தியாவில் அமிர்த காலம் தொடங்கிவிட்டதாக பாரதிய ஜனதா நம்பும் நிலையில், இந்த பட்ஜெட்டை அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட் என்று அவர் கூறி உள்ளார்.
ஒளிமயமான எதிர்காலம்
தொடர்ந்து பேசிய அவர், "இந்திய பொருளாதாரம் என்பது ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி சரியான திசையில் சென்றுகொண்டு இருக்கிறது. சர்வதேச அளவில் டிஜிட்டல் துறையில் இந்தியா பெரும் வளர்ச்சியை பெற்று இருக்கிறது. உலக அளவில் 10 வது இடத்திலிருந்து 5 வது பெரிய பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் வளர்ந்து இருக்கிறது. இந்தியாவில் தனி நபர் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது.
ஜி20 தலைமை
சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த ஜி 20 தலைமை பெரும் வாய்ப்பை வழங்கி இருக்கிறது." என்றார். இந்தியாவின் நடுத்தர மக்கள் வருமான வரியிலிருந்து ஏதாவது ஒரு வகையில் சலுகை கிடைக்குமா? என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வருமான வரி வகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
வரிச் சலுகை இருக்குமா?
அதேபோல் எந்த சலுகையும் அறிவிக்கப்படாதது மக்களை ஏமாற்றமடைய செய்தது. அத்துடன் பண வீக்கத்தின் காரணமாக மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டது. நடுத்தர மக்கள் செலுத்தும் வருமான வரித் தொகை 2017 - 18 நிதியாண்டிற்கு பிறகு மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. அதேபோல் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு வருமான வரி வகிதத்திலும் மாற்றம் ஏற்படவில்லை.
விவசாயிகளுக்கு சலுகை
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலை மையமாக வைத்து இந்த முறை கவர்ச்சிகரமான மக்கள் ஏதிர்பார்க்கும் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெரும் வாக்கு வங்கியை கொண்டு இருக்கும் விவசாயிகளுக்கு சாதகமாக அவர்கள் எதிர்பார்க்கும் முக்கிய திட்டங்கள் இதில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.