இந்தியாவில் 2022ல் கூகுளில் அதிக தேடல்.. திரெளபதி முர்முவை முந்திய நுபுர்சர்மா..இதோ டாப் 10 லிஸ்ட்!
டெல்லி: 2022ம் ஆண்டில் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் டாப் 10 பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதலிடத்தில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்முவும், அதற்கு அடுத்த இடத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் உள்ளனர். மேலும் இந்த பட்டியலில் டாப் 10ல் இடம்பிடித்தவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
2022ம் ஆண்டு நிறைவு பெற்று 2023ம் ஆண்டுக்கான புத்தாண்டு துவங்கி உள்ளது. இந்த புத்தாண்டு பிறந்த நிலையில் 2022 தொடர்பான நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் உலகில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் பல்வேறு முக்கிய விஷயங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி கூகுளில் மக்கள் யாரை, எதனை அதிகமாக தேடினார்கள் என்பது பற்றிய பல்வேறு சுவாரசிய தகவல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் வசிக்கும் மக்கள் கூகுளில் யாரை அதிகமாக தேடினார்கள் என்பது பற்றிய முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா? 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..எத்தனை நாளைக்கு தெரியுமா?
டாப் 10 பட்டியல் வெளியீடு
இந்தியாவை பொறுத்தமட்டில் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் டாப் 10ல் உள்ள பிரபலங்களின் விபரங்கள் வெளியாகி உள்ளது. இந்த டாப் 10 பட்டியிலில் இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, லலித் மோடி, சுஷ்மிதா சென் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
முதலிடத்தில் யார்?
அதன்படி இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் முதலிடத்தில் நுபுர் சர்மா உள்ளார். இவர் பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்தார். இந்நிலையில் தான் தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியது. குறிப்பாக வளைகுடா நாடுகள் நுபுர் சர்மாவின் பேச்சை கடுமையாக கண்டித்தன. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மன்னிப்பு கோரியபோதும் கூட நுபுர் சர்மா பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டலுக்கு ஆளானார். மேலும் நுபுர் சர்மாவின் பேச்சுக்கு உச்சநீதிமன்றமும் அவரை கடுமையாக சாடியது. இந்நிலையில் தான் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் நுபுர் சர்மா முதலிடத்தில் உள்ளார்.
2வது இடத்தில் யார்?
நுபுர் சர்மாவை தொடர்ந்து இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் 2ம் இடத்தில் இந்தியாவின் ஜனாதிபதி திரெளபதி முர்மு உள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் பாஜக சார்பில் ஒடிசாவை சேர்ந்த திரெளபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவரை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியின் சார்பில் யஷ்வந்த் சின்காவை நிறுத்திய நிலையில் திரெளபதி முர்மு வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் நாட்டின் முதல் பழங்குடியினத்தை சேர்ந்த ஜனாதிபதி என்ற பெருமையையும், நாட்டின் 2வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
3வது இடத்தில் யார்?
நுபுர் சர்மா, திரெளபதி முர்முவை தொடர்ந்து இந்தியாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளார். பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமருக்கான தேர்தல் நடந்தது. பல கட்டங்களாக நடந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனான ரிஷி சுனக், அவரை எதிர்த்து போட்டியிட்ட லிஸ் ட்ரஸிடம் தோல்வியடைந்தார். அதன்பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் லிஸ் ட்ரஸ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரிஷி சுனக் பிரதமரானார்.
4 மற்றும் 5வது இடத்தில் யார்?
இந்த பட்டியலில் 4வது இடத்திலும் லலித் மோடி உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் நடத்தியவர் என்ற பெருமை லலித் மோடியை தான் சேரும். இந்நிலையில் தான் கடந்த 2010ஆம் ஆண்டு ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது ரூ.470 கோடி நிதி மோசடி புகார் எழுந்தது. கிரிமினல் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவர் லண்டன் தப்பி சென்றார். இந்நிலையில் தான் அவருக்கும் பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென்னுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கடந்த ஆண்டு தகவல் பரவியது. இதனால் மீண்டும் லலித் மோடி டிரெண்ட் ஆனார். இதன்மூலம் லலித் மோடி இந்த பட்டியலில் 4வது இடத்திலும், அவருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட சுஷ்மிதா சென் 5வது இடத்திலும் உள்ளார்.
6, 7 வது இடத்தில் யார் யார்?
இந்த பட்டியலில் 6வது இடத்தில் அஞ்சலி அரோரா என்ற 23 வயது இளம்பெண் உள்ளார். இவர் ‛கச்சா பாதம்' என்ற நடன வீடியோவில் டிரெண்ட் ஆனார். கங்கனா ரனாவத்தின் ரியாலிட்டி ஷோ லாக் அப்பிலும் இவர் பங்கேற்றார். இதையடுத்து அவரை ஏராளமானவர்கள் சமூக வலைதளங்களில் பின்தொடர துவங்கினர். அந்த வகையில் தான் அஞ்சலி அரோரா 6வது இடத்தில் உள்ளது. 7 வது இடத்தில் அப்து ரோசிக் உள்ளார். உயரம் குறைவான இவர் தாஜிக் சிங்கராகவும், குத்து சண்டை வீரராகவும் உள்ளார். இவர் வளர்ச்சிக்கான ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் 19 வயது நிரம்பினாலும் கூட உயரம் குறைவாக சிறுவன் போல் உள்ளார். பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பிறகு இவர் பிரபலமடைந்தார். இவரது வீடியோவும் அதிகம் பரவ தொடங்கிய நிலையில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக மாறியுள்ளார்.
8 வது இடத்தில் ஏக்நாத் ஷிண்டே
இந்த பட்டியலில் 8 வது இடத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த நிலையில் அதிருப்தி அணியை இவர் உருவாக்கினார். இதையடுத்து முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சிவசனோ எம்எல்ஏக்களும் பாஜகவினரும் கூட்டணி அமைத்து புதிய ஆட்சியை அமைத்தனர். இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், முன்னாள் முதல்வரான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையால் ஏக்நாத் ஷிண்டே பிரபலமான நிலையில் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நபராக உருவெடுத்துள்ளார்.
9 மற்றும் 10வது இடத்தில் யார்?
இந்த பட்டியலில் கிரிக்கெட் வீரர் பிரவீன் தாம்பே 9 வது இடத்தில் உள்ளார். லெக்ஸ்பின்னரான இவரது வயது 41. இவர் ஐபிஎல் மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். 2013ல் ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணியில் இடம்பிடித்து சிறப்பாக ஆடினார். 2018 ல் ஓய்வு பெற்ற நிலையிலும் கூட 2022ல் இவரை அதிகமானவர்கள் தேடியுள்ளனர். ஏனென்றால் ஷ்ரேயாஸ் தல்படே நடித்த படம் ‛கவுன் பிரவீன் தாம்பே?' படம் உருவானது. இந்த படத்தால் தான் பிரவீன் தாம்பேவை அதிகமானவர்கள் தேடியுள்ளனர். இந்த பட்டியலில் 10வது இடத்தில் ஆம்பர் ஹார்ட் உள்ளார். உலகில் அதிகம் தேடப்பட்ட பெண்களில் டாப் 3ல் இடம்பெற்ற இவர் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் 10வது இடத்தில் உள்ளார். முன்னாள் கணவர் ஜானி டெப்பை அமெரிக்க நடிகை ஆம்பர் ஹார்ட் காதல் திருமணம் செய்த நிலையில் 15 மாதங்களில் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் பத்திரிகையில் ஜானி டெப்பை மறைமுகமாக குற்றம்சாட்டி ஆம்பர் ஹார்ட் கட்டுரை எழுதிய விவகாரத்தில் ஜானி டெப்புக்கு படவாய்ப்பு கிடைக்கவில்லை. இதை கண்டித்து நஷ்டஈடு கோரி ஜானி டெப் வழக்கு தொடர்ந்தார். இதில் ரூ.116 கோடி வழங்க ஆம்பர் ஹார்ட்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தான் ஆம்பர் ஹார்ட் 10 வது இடத்தில் உள்ளார்.