டிரம்ப் சொன்ன ஒரு வார்த்தை.. கச்சா எண்ணெய் விலை சரியுது.. பங்குச்சந்தை எகிறியது! உலக நாடுகள் நிம்மதி
டெல்லி: அமெரிக்கா- ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இது சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே ஈரான் போர் தொடர்பாக டிரம்ப் சமீபத்தில் ஒரு சில வார்த்தைகளைக் கூறியிருந்தார். அவர் அப்படி சொன்னவுடனேயே ஒரு பக்கம் கச்சா எண்ணெய் விலை தடாலடியாகச் சரிய ஆரம்பித்தது. இன்னொரு பக்கம் பங்குச்சந்தைகள் உயர ஆரம்பித்துள்ளன. டிரம்ப் அப்படி என்ன சொன்னார்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் 2வது வாரமாகத் தொடர்கிறது. இந்த மோதல் கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஆரம்பித்தது. ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து நடத்திய முதற்கட்ட தாக்குதல்களில் ஈரானின் சுப்ரீம் லீடர் கமேனி கொல்லப்பட்டார். இது ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. உடனடியாக ரான் பதிலடி கொடுக்க ஆரம்பித்தது.

உலக நாடுகள்
இஸ்ரேல் மீது நேரடியாகத் தாக்குதலை ஈரான் ஆரம்பித்தது. அதேபோல மத்திய கிழக்கில் பல்வேறு நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் இருக்கும் சூழலில், அந்த அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்தும் ஈரான் தாக்குதல்களை நடத்தியது. இது நிலைமை மேலும் மேலும் சிக்கலாக மாற்றியது. இதன் பாதிப்புகள் சர்வதேச அளவில் எதிரொலிக்க ஆரம்பித்தது. மத்திய கிழக்கில் வெடித்த மோதலால் உலக நாடுகள் பல பிரஷர்களை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன.
இதனால் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதே உலக நாடுகளின் ஒரே கேள்வியாக இருந்தது. இந்த போர் தொடர்பாக டிரம்ப் சமீபத்தில் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருந்தார். அதாவது ஈரான் மீதான போர் மிக விரைவில் முடிவுக்கு வரலாம் என்று டிரம்ப் கூறியிருந்தார். அவரது இந்த வார்த்தைகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
டிரம்ப் சொன்ன வார்த்தை
ஈரான்- இஸ்ரேல் மோதல் எவ்வளவு காலம் தொடரும் என்பதில் தெளிவு இல்லாத சூழல் நிலவியது. இது உலக அளவில் கச்சா எண்ணெய் சப்ளை தொடங்கி பல்வேறு விஷயங்களைப் பாதித்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலையும் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்திற்குப் போனது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் கூட உயரும் அபாயம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் தான் ஈரான் மோதல் சீக்கிரமே முடிவுக்கு வரும் என டிரம்ப் கூறினார். இதனால் உச்சத்தில் இருந்த எண்ணெய் விலைகள் தடாலடியாகச் சரிந்தன.
சரிந்த கச்சா எண்ணெய்
மேலும், உலகச் சந்தைகளில் கடந்த 24 மணி நேரம் பல அசாதாரணமான பொருளாதார நிகழ்வுகளைக் கண்டது. நேற்று காலை, சர்வதேச கச்சா எண்ணெய் குறியீடான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $100ஐ தாண்டியது. 2022இல் உக்ரைனை ரஷ்யா இடையே மோதல் ஏற்பட்டபோது தான் கச்சா எண்ணெய் விலை இவ்வளவு உயர்ந்தது. அதன் பிறகு அது கட்டுக்குள்ளேயே இருந்த சூழலில் மீண்டும் மத்திய கிழக்கு மோதலால் ரேட் எகிறியது. மேலும், ஆசியா மற்றும் ஐரோப்பாவின் முக்கிய பங்குச் சந்தைகளும் போரால் கடுமையாகச் சரிந்தது.
எகிற பங்குச்சந்தை
சந்தை நிலவரங்களைக் கூர்ந்து கவனிக்கும் டிரம்ப், சிபிஎஸ் நியூஸ் உடனான பேட்டியில், ஈரான் மீதான போர் கிட்டத்தட்ட முற்றிலுமாக முடிந்துவிட்டது என்று தெரிவித்தார். மேலும், அது சீக்கிரமே முடியும் என தெரிவித்தார். டிரம்ப் சொன்ன இந்த வார்த்தையைக் கேட்டவுடன் சர்வதேச மார்கெட் தடாலடியாகச் சரிந்தது. திங்கட்கிழமை $119.50 வரை உயர்ந்த கச்சா எண்ணெய், டிரம்ப்பால் $98.96 வரை சரிந்தது. அதேபோல வால் ஸ்ட்ரீட்டில் S&P 500 சரிவிலிருந்து மீண்டு, இறுதியில் லாபத்தில் முடிந்தது. இந்த பங்குச்சந்தையும் கூட இன்றைய தினம் பிற்பகலில் லாபத்திலேயே வர்த்தகமானது.












Click it and Unblock the Notifications