மீண்டும் அனுப்பிய மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப அதிகாரமே இல்லை- ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் குட்டு!
டெல்லி: மாநில சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் அதிரடியாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ரவி நிறுத்தி வைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை சட்டசபைக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி. தமிழ்நாடு அரசு, சட்டசபை சிறப்பு கூட்டத்தைக் கூட்டி 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது.

சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். இதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்சும் உறுதி செய்திருந்தது.
இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது 2-வது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதிக்கு ஆளுநர் ரவி அனுப்பி வைத்திருக்கிறார் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்த கருத்துகள்:
- மசோதாக்களுக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தை ஆளுநர்தான் தீர்க்க வேண்டும்.
- மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பதில் உச்சநீதிமன்றம் தலையிட்டுதான் தீர்ப்பளிக்க வேண்டும் என ஆளுநர் தரப்பு எதிர்பார்க்கிறதா?
- எம்.பி, எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜனாதிபதி. அவருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அத்தகைய அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது.
- மத்திய அரசால் நியமிக்கப்படுகிற ஆளுநருக்கு மசோதாக்களை ஒழித்து கட்டவோ, மசோதாக்களை நிறைவேற்றவிடாமல் முடக்கி வைக்கவோ எந்த அதிகாரமும் கிடையாது
- மசோதாக்களை முதல் முறை அரசு தரப்பு அனுப்பிய போதே ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கலாமே?
- மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பினால் அவற்றை எப்படி ஜனாதிபதிக்கு அனுப்ப முடியும்?
- மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு 3 வாய்ப்புகள்தான். 1) மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது 2) மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைப்பது அல்லது ஜனாதிபதிக்கு அனுப்புவது 3) மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைப்பது என ஆளுநர் முடிவெடுத்துவிட்டால் 2-வது முறை அனுப்பும் மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடியாது. அந்த கேள்விக்கே இடம் கிடையாது.
- ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே பிரச்சனைகள் இல்லை. முதல்வரை ஆளுநர் அழைத்துபேசிதான் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை வரும் 11-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications