ஒரே நாடு ஒரே ரேஷன்.. ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும்.. மத்திய அமைச்சர்
டெல்லி: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது என ராம்விலாஸ் பாஸ்வான் தகவல் தெரிவித்துள்ளார்.
உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் லோக்சபாவில் நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி தகுதியுள்ள பயனாளிகள் தங்களுக்குரிய உணவுப் பொருள்களை இந்தியா முழுவதும் எந்த நியாய விலை கடையிலும் தாங்கள் வைத்திருக்கும் ரேஷன் கார்டு மூலம் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தை பயனாளிகளின் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் அடையாளங்களை நியாயவிலை கடைகளில் உள்ள மின்னணு கையடக்க விற்பனை கருவிகளில் இணைத்த பின்புதான் நிறைவேற்ற முடியும்.
இதற்காக மாநிலங்களில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் கையடக்க விற்பனை கருவிகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் நாடு முழுவதும் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
தங்கள் வேலை மற்றும் இதர காரணங்களுக்காக நாடு முழுவதும் அடிக்கடி இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு இது பயனளிக்கும். குறிப்பாக கட்டுமான பணிகள், எண்ணெய் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு பணி மாறுதல் ஏற்படுமாயின் அவர்களுக்கு இது பயன்படும் என்றார் பாஸ்வான்.












Click it and Unblock the Notifications