'மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று நீதிகளில் தாமதம் ஏற்படுவது' - பிரதமர் மோடி
டெல்லி: அகில இந்திய சட்டத்துறை அமைச்சர்கள், செயலாளர்கள் மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சட்டங்கள் மக்களுக்கு எளிதாக புரியும் படி இருக்க வேண்டும் என்றும், தாமதமான நீதியே நீதித்துறை சந்திக்கும் சவால்களில் ஒன்று எனவும் பேசியுள்ளார்.
அகில இந்திய சட்டத்துறை அமைச்சர்கள், செயலாளர்கள் மாநாடு குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டம் ஏக்தா நகரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டை பிரதமர் மோடி காணொலி காடி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு
நீதித்துறை சந்திக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்று தாமதமாக அளிக்கப்படும் நீதி தான். நீதிகளில் தாமதம் ஏற்படுவது மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று. இதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்த பல சட்டங்கள் கூட இன்னும் நம் நாட்டின் பல மாநிலங்களில் நடைமுறையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

மக்களுக்கு புரிந்திடும் வகையில்..
இது தொடர்பாக மாநில சட்ட அமைச்சர்கள் மறு ஆய்வு செய்யவேண்டும். நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான வகையில் நீதி விரைவாகவும் எளிதாகவும் கிடைக்கச்செய்வதை இவர்கள் உறுதி செய்ய வேண்டும். சுமார் கடந்த 8 ஆண்டுகளில் தேவையில்லாத மற்றும் பயன்பாட்டில் இல்லாத 1500-க்கும் அதிகமான சட்டங்களை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு புதிய சட்டம் உருவாக்கப்படும் போது அது மக்களுக்கு புரியும் வகையில் இருந்திட வேண்டும்.

எத்தனை ஆண்டுகள்..
ஒவ்வொரு புதிய சட்டம் உருவாக்கப்படும் போதும் அது ஏழை மற்றும் சாமனிய மக்களுக்கு புரிந்திடும் வகையில் எளிய மொழியில் இருந்திடல் வேண்டும் என்பதை கவனத்தில் வைத்து கொண்டு சட்டம் இயற்றப்பட வேண்டும். இவ்வாறு உருவாக்கப்படும் சட்டம் வட்டார மொழியிலும் இருப்பதும் அவசியம். சில நாடுகளில் ஒரு சட்டம் வகுக்கப்படும் போதே அது எவ்வளவு காலம் செயல்பாட்டில் இருக்கும் என முடிவு செய்யும் அம்சம் உள்ளது.

வயது மற்றும் காலாவதி தேதி
எனவே, இந்த வழியில், ஒரு சட்டத்தை வகுக்கும் போதே சட்டத்தின் வயது மற்றும் காலாவதி தேதியும் தீர்மானிக்கப்பட வேண்டும். அப்போதுதான் குறிப்பிட்ட காலம் வரும் போது அன்றைய சூழலுக்கு ஏற்ப இந்த சட்டத்தை மறு ஆய்வு செய்ய முடியும். இதே மனப்பான்மையுடன் நாம் முன்னேற வேண்டும். இதேபோல் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியில் இளைஞர்களுக்கு சட்டப் படிப்பினை உருவாக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தேவையில்லா சட்டங்களை
மோடி தொடங்கி வைத்துள்ள சட்டத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மாநாட்டில் தேவையில்லாத மற்றும் பயன்படாத சட்டங்களை நீக்குவது, நீதியை எவ்வாறு விரைவில் மற்றும் எளிதில் மக்களுக்கு கிடைக்க செய்வது.. ஒட்டுமொத்த சட்டங்களின் உள்கட்டமைப்பை மாற்றுவது உள்ளிட்ட பல தலைப்புகளில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications