வெங்காய விலை உயர்வு : ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி
ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மழை காரணமான உள்நாட்டு வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்
டெல்லி: நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, வட கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட தமிழக சந்தைகளில் வெங்காயம் விலை ஒரு கிலோ 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45க்கு விற்பனை செய்கிறது. மணிக்கணக்கில் காத்திருந்து ஒருவருக்கு 2 கிலோ வெங்காயம் வாங்கிச்செல்கின்றனர். வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், தட்டுப்பாட்டை காரணம் காட்டி வியாபாரிகள் அவற்றை பதுக்கி, கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைத்ததற்கும் மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது. அதாவது, வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கு மத்திய அரசு வரம்பு நிர்ணயம் செய்துள்ளது.
இதன்படி, சில்லரை வியாபாரிகள் அதிகபட்சமாக தங்களிடம் 2 டன் வரை வெங்காயத்தை இருப்பு வைத்துக் கொள்ளலாம். மொத்த வியாபாரிகள் அதிகபட்சமாக 25 டன் வரை இருப்பு வைக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சப்ளை செய்யப்படும் வெங்காயத்தில் 30 சதவிகிதம் மராட்டிய மாநிலம் நாசிக்கில் இருந்தும், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து 25 சதவிகிதமும், ஆந்திராவில் இருந்து 25 சதவிகிதமும் சப்ளை செய்யப்படுகிறது. எஞ்சிய 20 சதவிகிதம் வெங்காயம் தமிழகத்தின் உள்மாநில உற்பத்தியில் கிடைக்கிறது.
மழை காரணமான உள்நாட்டு வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதன்படி எகிப்து நாட்டு வெங்காயம் சில தினங்களுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தான் வெங்காயமும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரவைக்கப்பட்டது.
சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.180... வெங்காயம் இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி டிப்ஸ் சொல்லுங்களேன்
வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் இந்த வெங்காயம் தற்போது வரை சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்றும், மும்பையில் இறக்குமதி செய்து தான் தமிழகத்துக்கு கொண்டு வரப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இதுவரை 120 டன் வெளிநாட்டு வெங்காய மூட்டைகள் வந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
எகிப்து மற்றும் ஆப்கானிஸ்தான் வெங்காயங்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே நாடு முழுவதும் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பண்டிகை காலங்கள் வர உள்ள நிலையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் சந்தைகளில் விற்பனைக்கு வரும் போது விலை குறைய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.