ஆபரேஷன் கங்கா: உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்க விரையும் 4 அமைச்சர்கள்! பிரதமர் மோடி முக்கிய முடிவு
டெல்லி: உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் 4 மத்திய அமைச்சர்கள் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தெரியவந்துள்ளது.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. உக்ரைன் எல்லையில் மாணவர்கள் மீது தாக்குதல் நடந்த நிலையில், இன்று மீண்டும் பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் உக்ரைனில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்டெடுக்க அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆபரேஷன் கங்கா
ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, உக்ரைனில் இருந்து இந்தியமாணவர்களை மீட்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை விவரித்தார். மாணவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

ஆலோசனை
உக்ரைனில் இருந்து அண்டை நாடுகள் வழியாக, 5 விமானங்களில் இதுவரை இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளார்கள். இந்நிலையில், உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்கள் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவில் உள்ள பெற்றோர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இன்று பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மீட்பு பணி
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உக்ரைனில் இருந்து மாணவர்களை எப்படி மீட்பது, பத்திரமாக எப்படி எல்லையைக் கடக்கவைப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உக்ரைனின் அண்டை நாடுகளின் வழியாக மாணவர்களை மீட்டு வரலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதோடு, இந்த மீட்பு பணிகளில் மத்திய அமைச்சர்கள் ஈடுபட்டு அண்டை நாடுகளுக்கு பயணம் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

மத்திய அமைச்சர்கள்
மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ ஆகியோரை உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் உட்பட அனைவரையும் மீட்கும் பணியில் ஈடுபட அந்நாட்டின் அண்டை நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ளதால் இந்திய மாணவர்கள் அவரவர் தங்கியுள்ள இடத்தை விட்டுவெளியே வரக்கூடாது. பொதுவெளியில் நடமாடக் கூடாது என உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications