சுடுவதை நிறுத்துங்கள்.. திணறடித்த எதிர்க்கட்சிகள்.. திகைத்துப்போன அனுராக் தாக்கூர்.. லோக்சபாவில்!
டெல்லி: லோக்சபாவில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அமைச்சர் அனுராக் தாக்கூர் உரையாற்றியபோது, எதிர்க்கட்சி எம்.பிக்கள், இணைந்து, "கோலி மர்னா பந்த் கரோ" என்று கோஷமிட்டனர்.
ஜனவரி 27ம் தேதி டெல்லியில் நடைபெற்ற பாஜக தேர்தல் கூட்டத்தில் பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், துரோகிகளை சுட்டு கொல்ல வேண்டும் என முழங்கினார்.
இந்த பேச்சு குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்களை குறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து அவரது பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்த நிலையில்தான், டெல்லியில், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஷஹிம்பாக் பகுதியிலுள்ள போராட்டக்காரர்கள் மீது வலதுசாரி ஆதரவாளர்கள் அடுத்தடுத்த நாட்களில் 3 முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில்தான், லோக்சபாவில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அமைச்சர் அனுராக் தாக்கூர் உரையாற்றியபோது, எதிர்க்கட்சி எம்.பிக்கள், இணைந்து, "கோலி மர்னா பந்த் கரோ" என்று கோஷமிட்டனர். அதாவது துப்பாக்கி சூட்டை நிறுத்துங்கள் என இதற்கு பொருள். சில காங்கிரஸ் உறுப்பினர்கள், அனுராக்கை நோக்கி, "குண்டுகளை எங்கே வைத்துள்ளீர்கள்" என கேள்வி எழுப்பினர்.
அடுத்தடுத்து 3 துப்பாக்கி சூடு.. கடும் அச்சத்தில் மக்கள்.. டெல்லி தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளதா?
இதையடுத்து, காங்கிரஸ் குழு தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்த சில எதிர்ப்பாளர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். மக்கள் அரசியலமைப்பைப் பாதுகாக்க எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர், மேலும் தேசியக் கொடிகளைத்தான் அவர்கள் சுமக்கின்றனர்.
பாஜகவினர் "போலி இந்துக்கள்" அவர்கள் "உண்மையான இந்துக்கள்" என்றால் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
மக்களவையில் பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா பேசியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். கடந்த வாரம், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய ஷாஹீன்பாக்கில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்து இவர் மோசமாக பேசியிருந்தார். இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் உங்களின் வீடுகளுக்குள் நுழைந்து உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய கூடியவர்கள் என்று டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் அவர் கூறியிருந்தார்.