குடியரசு தலைவர் பொது வேட்பாளர்.. நிராகரித்த சரத் பவார்! ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மம்தா தகவல்
டெல்லி : ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு பேசிய மம்தா பானர்ஜி, பொது வேட்பாளராக போட்டியிட சரத் பவாரிடம் வைத்த கோரிக்கையை அவர் மீண்டும் நிராகரித்துவிட்டார் என்றும், வேட்பாளர் யார் என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
குடியரசு ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ள நிலையில், குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம் 18ஆம் தேதி அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டின் 16வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதி அன்று நடைபெற்று முடிவுகள் வெளியிடப்படும். இந்த தேர்தலில் 776 எம்பிக்களும், 4,033 எம்எல்ஏக்களும் வாக்களிக்கவுள்ளனர்.

குடியரசு தலைவர் தேர்தல்
இந்நிலையில் ஆளும் பாஜக தரப்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதுதொடர்பாக உட்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் ஆதரவை திரட்ட ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பாஜவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக கூட்டு வேட்பாளரை நிறுத்துவதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி முயற்சி
இதுதொடர்பாக, முக்கிய ஆலோசனை நடத்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளுக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 11ம் தேதி கடிதம் மூலம் அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான சரத்பவாரை நிறுத்த பெரும்பாலான கட்சிகள் விரும்புகின்றன. ஆனால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பமில்லை என சரத்பவார் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

எதிர்கட்சிகள் ஆலோசனை
இந்நிலையில், மம்தா அழைப்பின் பேரில், ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை முடிவு செய்வதற்கான எதிர்க்கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லி கான்ஸ்டிடியூசன் கிளப்பில் நடைபெற்று வருகிறது. இதில், திமுக சார்பில் கட்சியின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பதாக உறுதி அளித்தனர்.
இந்நிலையில் சிவசேனா சார்பாக ப்ரியங்கா சதுர்வேதி, மதசார்பற்ற ஜனதாதளம் சார்பாக தேவகவுடா, குமாரசாமி, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக சரத் பவார், உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதேநேரத்தில் ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, சிரோன்மணி அகாலி தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இந்நிலையில் நேற்று டெல்லி வந்த மம்தா பானர்ஜி, டெல்லியில் உள்ள சரத் பவார் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். ஏற்கனவே, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் சரத் பவாருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி உள்ளன. மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோரும் சரத்பவாரை சந்தித்து பேசி உள்ளனர். இதனால், இன்றைய கூட்டத்தில் சரத்பவார் பொது வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடக்கும் நிலையில், ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படுவது முக்கியமான விஷயமாகும். இது காலத்தின் அவசியம் என்றும் மம்தா வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வலுவான பாஜக
ஆனால் அரசியல் விவகாரங்களில் பிரதமரை பகிரங்கமாக விமர்சித்தாலும், நரேந்திர மோடியுடன் நல்ல தனிப்பட்ட நட்பைக் கொண்ட பவார், கூட்டு எதிர்க்கட்சி வேட்பாளராக வருவதற்கான வாய்ப்பை நிராகரித்தாகக் கூறப்படுகிறது. குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்களில் ஒருவராகத் தோன்றினாலும், மூத்த தலைவரான சரத் பவார், மம்தா பானர்ஜியின் வாய்ப்பை நிராகரித்து, தீவிர அரசியலில் இருக்க விரும்புவதாகக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் பெரும்பாலான மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கும் அக்கட்சி வாக்குகளோடு, பிஜு ஜனதா தளம், அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளின் ஆதரவுடன் பாதி பலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மம்தா அறிவிப்பு
எதிர்க்கட்சிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த திரிணாமுல் காங். தலைவர் மம்தா பானர்ஜி, "குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. பொது வேட்பாளராக போட்டியிட சரத்பவாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை சரத் பவார் மீண்டும் நிராகரித்துவிட்டார். பொது வேட்பாளர் யார் என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications