அருணாச்சல்: சீனா ஊடுருவல் முறியடிப்பு-நமது வீரர்கள் உயிரிழக்கவோ, படுகாயம் அடையவோ இல்லை: ராஜ்நாத்சிங்
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இம்மோதலில் நமது ராணுவத்தினர் உயிரிழக்கவோ, படுகாயமடையவோ இல்லை என்றும் நாடாளுமன்ற லோக்சபாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிப்பதை இலக்காக வைத்திருக்கிறது சீனா. அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தமது நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களையும் எதிர்க்கிறது; நாட்டின் தலைவர்கள் அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு செல்வதையும் சீனா எதிர்க்கிறது. இதற்கு நமது நாடும் தொடர்ந்து பதிலடி தந்து வருகிறது.
பூடானின் டோக்லாம் பீடபூமி என்பது வடகிழக்கு இந்தியாவை இந்தியாவின் மெயின் நிலப்பரப்புடன் இணைக்கக் கூடியது. அதாவது கோழியின் கழுத்து போன்ற பகுதி. ஆகையால் பூடானின் டோக்லாம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சிக்கிறது. இதற்கு இந்தியாவும் பதிலடி தந்து வருகிறது. ஆனாலும் டோக்லாம் பகுதியில் தமது பல்வேறு கட்டுமானங்கள் மூலம் ராணுவத்தைக் குவித்து வைத்துள்ளது சீனா.
சாதாரண ரயில் டிக்கெட் எடுத்தாலும் பரவாயில்லை.. இனி முன்பதிவு பெட்டியில் செல்லலாம்.. எப்படி தெரியுமா?
அருணாச்சலில் ஊடுருவல் முயற்சி
இதன்பின்னர் கடந்த 9-ந் தேதி தவாங் செக்டர் வழியாக அருணாச்சலப் பிரதேசத்துக்குள் ஊடுருவி ஆக்கிரமிக்க சீனா முயற்சித்துள்ளது. ஆனால் இந்திய ராணுவ வீரர்கள் சீனாவின் இந்த முயற்சியை கடுமையாக போராடி தடுத்து நிறுத்தினர். இதில் இருதரப்பு ராணுவ வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்; இவர்களில் 6 பேர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கார்கே, ஓவைசி பாய்ச்சல்
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் சீனாவின் ஊடுருவல் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தமது ட்விட்டர் பக்கத்தில், நாடாளுமன்றத்தில் சீனாவின் ஊடுருவல் தொடர்பாக விவாதித்து நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மஜ்லிஸ் கட்சி எம்பி ஓவைசியும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப் போவதாக கூறினார்
ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்கள்
மேலும் காங்கிரஸ் கட்சி எம்.பி. சையத் நசீர், சீனாவின் ஊடுருவல் தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதிக்க வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். இதேபோல் லோக்சபாவில் விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரியும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார். சரத்து 267-ன் கீழ் மத்திய அரசு ராஜ்யசபாவில் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தியது திரிணாமுல் காங்கிரஸ். அக்கட்சியும் இது தொடர்பாக நோட்டீஸ் கொடுத்தது.
ராஜ்நாத்சிங் ஆலோசனை
இதனிடையே அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் ஊடுருவல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று விளக்கம் தருவார் என அறிவித்தது மத்திய அரசு. முன்னதாக முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நேரில் சந்தித்து எல்லை நிலவரம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
நாடாளுமன்றத்தில் அமளி
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் தொடங்கின. லோக்சபாவில் நாடாளுமன்ற தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் சீனா ஊடுருவல், தாக்குதல் முயற்சிகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்து சபையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவிலும் அமளி தொடர்ந்தது. இதனால் ராஜ்யசபா நடவடிக்கைகளும் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.
ராஜ்நாத்சிங் அறிக்கை
இதன்பின்னர் லோக்சபா பகல் 12 மணிக்கு கூடியது. அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சீனாவின் அத்துமீறல் தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்தார். ராஜ்நாத்சிங் அறிக்கை விவரம்: அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் டிசம்பர் 9-ந் தேதி சீன ராணுவத்தினர் ஊடுருவி ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டனர். நமது ராணுவத்தினர் சீன ராணுவத்தின் இம்முயற்சிகளை எதிர்கொண்டு முறியடித்து அவர்களது நிலைகளுக்கே திரும்பச் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ராஜதந்திர வழிகளில் சீனாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் அதை மாற்றி அமைக்கும் முயற்சிகளை முறியடிப்பதற்கும் நமது ராணுவ வீரர்கள் உறுதியாக உள்ளனர்.
உயிரிழப்பு, படுகாயம் எதுவும் இல்லை- ராஜ்நாத்சிங்
இச்சம்பவத்தைத் தொடர்ந்து டிசம்பர் 11-ந் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. எல்லை ஊடுருவல் முயற்சிகளை சீன ராணுவம் மறுத்ததுடன் எல்லையில் அமைதி நிலைநாட்டப்படும் எனவும் தெரிவித்தது. இருதரப்பிலும் ராணுவ வீரர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. இந்த நிகழ்வில் நமது ராணுவ வீரர்கள் கொல்லப்படவோ, படுகாயமடையவோ இல்லை என்பதை சபைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நமது ராணுவம் உரிய நேரத்தில் நடவடிக்கையில் இறங்கியதால் சீன ராணுவத்தினர் தங்களது நிலைகளுக்கு திரும்பிச் சென்றனர். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார். இதனைத் தொடர்ந்து ராஜ்நாத்சிங் அறிக்கை மீது விவாதம் நடத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தினர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.