காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த 700 பேர் கைது.. பாதுகாப்பு படையினர் அதிரடி ஆக்ஷன்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இருந்ததாக சுமார் 700 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த சில நாட்களாகவே பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் அங்கு 7 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாகக் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
குட் நியூஸ்.. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அதேபோல கடந்த வியாழக்கிழமை ஸ்ரீநகர் அருகேயுள்ள இட்கா சங்கம் என்ற பகுதியில் அரசுப் பள்ளியில் புகுந்த பயங்கரவாதிகள் 2 ஆசிரியர்களை சுட்டுக் கொன்றனர். இப்படி பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
700 பேர் கைது
இந்நிலையில், தொடரும் பயங்கரவாத தாக்குதலை ஒடுக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இருந்ததாக சுமார் 700 பேரை பாதுகாப்புப் படையினர் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பலருக்குத் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்புடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் அவர்கள் ஸ்ரீநகர், புட்காம் அல்லது தெற்கு காஷ்மீரின் பிற பகுதிகளில் சாதாரண நபர்களை போல வசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாலிபான் தாக்குதல்
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அதிகரிக்கும் படுகொலை சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாலிபான்களின் வெற்றியால் உந்தப்பட்டு பயங்கரவாதிகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இப்போது எளிதாக இருக்கும் நபர்களைக் குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார். தாலிபான்கள் வெற்றியைத் தொடர்ந்து, காஷ்மீர் பகுதியில் தாக்குதல் அதிகரிக்கலாம் எனப் பலரும் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பரூக் அப்துல்லா கோரிக்கை
முன்னதாக, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் காஷ்மீர் முதல்வருமான பரூக் அப்துல்லா, அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசின் பாலிசிகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் பிரதமர் மோடி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு வருகை தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
யார் காரணம்
காஷ்மீரில் தற்போது நடைபெறும் பெரும்பாலான தாக்குதல்களுக்குத் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கமே காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கம் முதலே பொதுமக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ள நிலையில், கடந்த வியாழக்கிழமை காஷ்மீரில் இருக்கும் சூழல் குறித்து ஆராய உள் துறை அமைச்சகம் சிறப்புக் குழு ஒன்றை அனுப்பியிருந்தது.
ஊருடுவல் முயற்சி
மேலும், அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்திருந்தார். அதேபோல பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் முயற்சியும் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற பயங்கரவாதி ஒருவரைப் பாதுகாப்புப் படையினர் உயிருடன் பிடித்திருந்திருந்தனர். இந்தச் சூழலில் தான், பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இருந்ததாக சுமார் 700 பேரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.