கொரோனா.. ராகுல் காந்தி சொன்னதெல்லாம் நடக்கிறதே.. இப்போதும் 2 முக்கிய ஐடியா சொல்கிறார்! ஏற்குமா அரசு?
டெல்லி: நிலைமை இப்படியே போனால் கொரோனா மூன்றாவது அலை மட்டும் கிடையாது அதற்கு மேலும் நோய் பரவல் அலை தாக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவிய காலம் தொட்டு அவ்வப்போது ராகுல் காந்தி அரசுக்கு பல அறிவுரைகளை வழங்கி வருகிறார் .எச்சரிக்கைகளை தெரிவித்து வருகிறார்.
கடந்த வருடம் நோய் பாதிப்பு அதிகம் இருந்தபோது ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் தளர்த்தப்பட்டது. நோய் வெகு வேகமாக பரவி வரும் போது ஊரடங்கு தளர்த்திய ஒரே நாடு இந்தியாதான் என்று அப்போது ராகுல்காந்தி விமர்சனம் செய்திருந்தார். அதேபோலத்தான், நோய் பாதிப்பு பின்னர் பல மாநிலங்களுக்கும் வேகமாக பரவத் தொடங்கியது.
இன்று 51-வது வயது- காங்.-ன் நம்பிக்கை நட்சத்திரம்... ராகுல் காந்தி கடக்க வேண்டிய காட்டாறுகள் ஏராளம்!
தடுப்பூசி கோரிக்கை
அதிகப்படியாக தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் மத்திய அரசு செய்யவில்லை . இதன் காரணமாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியதை நாடு பார்த்தது. தடுப்பூசி செலுத்த ஆரம்பித்த பிறகும் விருப்பம் இருப்பவர்கள் மட்டும் செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
ராகுல் காந்தி எச்சரிக்கை
இதை விமர்சனம் செய்த ராகுல் காந்தி, தேவை அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விவாதம் அபத்தமானது. ஒவ்வொரு இந்தியரும் தனது வாழ்க்கையை பாதுகாப்பதற்கான வாய்ப்புக்கு தகுதியானவர்கள் என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் ராகுல்காந்தி இவ்வாறு கூறியிருந்த நிலையில் ஏப்ரல் மாத இறுதியில் நாடு முழுக்க இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கையை நடைமுறை படுத்தி இருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. அதிலும் ராகுல் காந்தி முன்கூட்டியே தனது எச்சரிக்கையை பிறப்பித்திருந்தார்.
மோடி பாராட்டு
இந்த நிலையில்தான் நேற்று ஒரே நாளில் 86 லட்சம் தடுப்பூசிகள் நாடு முழுக்க செலுத்தப்பட்டுள்ளன. இதை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்தார். ஆனால் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, இவ்வாறு மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்று ஒரு எச்சரிக்கையை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வெள்ளை அறிக்கை
கொரோனா பாதிப்பு தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் இன்று ஒரு வெள்ளை அறிக்கையை நாங்கள் வெளியிடுகிறோம். இதன் நோக்கம் அரசை குறை சொல்வது கிடையாது. மூன்றாவது அலைக்கு முன்பாக இந்தியா தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதை வெளியிடுகிறோம். மூன்றாவது அலையை தவிர்க்க முடியாதது என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரிந்த விஷயம்தான் .
மேலும் பல அலைகள்
3வது அலை வந்ததும் இந்த பிரச்சினை முடிந்து விடும் என்று நினைத்து விடாதீர்கள். இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. இது சாதாரண நோய் கிடையாது. எனவே அதற்கு பிறகும் பல்வேறு அலைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே நமது முழு நோக்கமும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பதில் மட்டும்தான் இருக்க வேண்டும்.
மோடி கண்ணீர் காப்பாற்றாது
ஆக்சிஜன் இருப்பு போதிய அளவுக்கு வைக்கப்படவேண்டும். ஆக்சிஜன் தான் நோயாளிகளை காப்பாற்றுமே தவிர பிரதமர் நரேந்திர மோடியின் கண்ணீர் காப்பாற்றாது. இது அரசியல் கிடையாது. ஒரு வைரசுக்கு எதிரான போராட்டம் என்பதை பிரதமர் நரேந்திர மோடி தனது மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2 பரிந்துரைகள்
ராகுல் காந்தியின் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் இருந்து அரசுக்கு இரண்டு எச்சரிக்கைகள் அல்லது பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளன என்று எடுத்துக் கொள்ளலாம். அதில் ஒன்று மூன்றாவது அலை தாக்கிய பிறகு வேறு பிரச்சினை ஏற்படாது என்று மெத்தனமாக இருந்து விடாதீர்கள் என்பது ஒரு செய்தி. இதை தடுப்பதற்கு அனைவருக்கும் கூடிய விரைவில் தடுப்பூசிகளை போட்டு ஆக வேண்டும் என்பது மற்றொரு செய்தி. இதை மத்திய அரசு செவி மடுக்குமா! அல்லது வழக்கம் போல பாஜகவினர் ராகுல்காந்தியை கேலி கிண்டல் செய்து சமூகவலைத்தளங்களில் கேலிச் சித்திரங்கள் வரைந்து இந்த விஷயத்தை மறக்கடிப்பார்களா? என்பதை வரும் நாட்கள் பதில் சொல்லும்.