"சோனியா, ராகுல் சொல்வதை.. புதிய காங்கிரஸ் தலைவர் நிச்சயம் கேட்க வேண்டும்!" ப.சிதம்பரம் திட்டவட்டம்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் நேற்று நடந்து முடிந்த நிலையில், மூத்த தலைவர் ப. சிதம்பரம் இந்த விவகாரத்தில் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
நேற்றைத் தினம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற்றது. சோனியா காந்தி, ராகுல் காந்தி என மொத்தம் 9000க்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.
குண்டை போட்ட ஆறுமுகசாமி ஆணையம்.. ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது சந்தேகம்! விசாரிக்க அதிரடி பரிந்துரை
காங்கிரஸ் தலைவர் தேர்தல்
ராகுல் காந்தி, சோனியா காந்தி உட்பட நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இந்த காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடவில்லை. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பின், நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். இந்தச் சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதாவது புதிய காங்கிரஸ் தலைவரைத் தேர்வு செய்வது நேரு குடும்பத்தினரின் குரலைக் கட்சிக்குள் குறைக்காது என்று அவர் தெரிவித்து உள்ளார்.
ப. சிதம்பரம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "புதிய தலைவர் தேர்வுக்குப் பின்னர், கட்சிக்குள் நேரு குடும்பத்தினரின் வாய்ஸ் குறையும் என்று யாரும் சொல்லவில்லை. இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் 90 முதல் 95% முடிவுகளைக் காங்கிரஸ் தலைவரின் அதிகாரத்தின் கீழ் அவர் தான் எடுப்பார். அதேநேரம் முக்கிய முடிவுகள் என்பது மற்ற தலைவர்களின் கருத்துகளை உள்ளடக்கியதாக இருக்கும். காங்கிரஸ் செயற்குழு, நாடாளுமன்ற குழுக்களில் நேரு குடும்பத்தினர் கண்டிப்பாக இருப்பார்கள்.
கேட்க வேண்டும்
அவர்கள் பொறுப்புகள் இதில் இருந்து மறைந்துவிடும் என்று நினைப்பது தவறு. நேரு குடும்பத்தினர் முக்கிய பிரச்சினைகளில் கண்டிப்பாக தங்கள் கருத்துகளைக் கூறுவார்கள். புதிதாகக் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வருபவர்கள் நிச்சயம் நேரு குடும்பத்தினரின் கருத்துகளைக் கேட்க வேண்டும். அவர்கள் இத்தனை காலம் கட்சிக்கு ஆற்றிய சேவையை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இணைந்து பணியாற்ற வேண்டும்
கடந்த 22 ஆண்டுகளில் நடந்த முக்கிய மாற்றமாக இந்தத் தேர்தலை நாம் பார்க்கலாம். புதிய காங்கிரஸ் தலைவர் நேரு குடும்பத்தினர் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.. அவர் மாநிலத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். மிக விரைவில் அனைத்து தலைவர்கள் உடனும் இணைந்து பணியாற்ற அவர் கற்றுக்கொள்வார் என்றே நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
கட்சி சீர்திருத்தம்
முன்னதாக மல்லிகார்ஜுன கார்கேவும் நேரு குடும்பத்தினரின் கருத்தைக் கேட்க எவ்வித தயக்கமும் தனக்கு இல்லை என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாகச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் சிதம்பரம். பாஜகவை எதிர்கொள்ள இப்போது இருக்கும் கட்டமைப்பை விட வலுவான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
முதல் பணி
இது தொடர்பாக அவர் பேசுகையில், "காங்கிரசில் அமைப்பு ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்துவது தான் காங்கிரஸ் தலைவரின் முதல் பணியாக இருக்கும். இதை 15 மாதங்களில் செய்து முடிக்க முடியும். காங்கிரஸ் தலைவர் தேர்தல் சிறப்பாக நடந்தது. நான் தான் முதலில் வாக்கைப் பதிவு செய்தேன். புதிய தலைவருடன் இணைந்து பணியாற்ற காங்கிரஸ் கட்சியினர் தயாராக உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.