நிதிஷ்குமாருக்கு செம்ம நோஸ் கட்: பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து இல்லை- மத்திய அரசு திட்டவட்டமான பதில்!
டெல்லி: பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய நிதித்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மத்தியில் பாஜக மீண்டும் 3-வது முறையாக ஆட்சி அமைக்க நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியூ) ஆதரவு மிக முக்கியமானது. ஜேடியூவின் மிக முக்கியமான கோரிக்கையான பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து என்பதை மத்திய பாஜக அரசு நிராகரித்திருப்பது நிதிஷ்குமாருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜகவால் தனித்து பெரும்பான்மைக்கான இடங்களைப் பெற முடியவில்லை. இதனால் தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது பாஜக. தெலுங்கு தேசம், ஜேடியூ இரண்டுமே ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் சிறப்பு நிதி ஒதுக்கீடு கோரி வருகின்றன.

இந்த நிலையில் லோக்சபாவில் ஜேடியூ எம்பி ராம்பிரித் மண்டல் எழுத்துப்பூர்வமாக, பீகார் மாநில சிறப்பு அந்தஸ்து குறித்து கேள்வி கேட்டிருந்தார். இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளிக்கையில், பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம்ம் இல்லை என தெரிவித்தார். மேலும் சிறப்பு அந்தஸ்து என்பது எந்தெந்த மாநிலங்களுக்கு வழங்கப்படக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்பதையும் பட்டியலிட்ட மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, பீகார் மாநிலமானது சிறப்பு அந்தஸ்து பெறக் கூடிய வரையறைகளில் இடம் பெறவில்லை எனவும் விவரித்தார்.
மத்திய அரசின் இந்த பதிலை முன்வைத்து ஜேடியூ மற்றும் முதல்வர் நிதிஷ்குமாரை லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கடுமையாக விமர்சித்துள்ளது. நிதிஷ்குமாரும் ஜேடியூவும் மத்திய அரசின் அதிகாரங்களை ருசிக்கத்தான் விரும்புகின்றனரே தவிர மாநிலத்தின் நலனை பாதுகாக்கும் எண்ணத்தில் இல்லை. நிதிஷ்குமாரும் ஜேடியூவும் அரசியலுக்காக நாடகமாடி பீகார் மாநில மக்களை ஏமாற்றுகின்றனர் என ராஷ்டிரிய ஜனதா தளம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் ஜேடியூ தலைவர்களோ, பீகாருக்கு சிறப்பு அந்தஸ்தைத்தான் மத்திய அரசு மறுத்துள்ளது; நாங்கள் எப்படியும் சிறப்பு நிதித் தொகுப்பையாவது பெற்றுவிடுவோம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications