கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நன்கொடை அளித்த ஆஸி வீரர் பாட் கம்மின்ஸ்... அந்த மனசுதான் கடவுள்
இந்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் 50ஆயிரம் டாலர் நன்கொடையாக அளித்துள்ளார்.
டெல்லி: ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரருமான பாட் கம்மின்ஸ், இந்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்கு 50 ஆயிரம் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். தான் செய்த இந்தச் சிறிய பங்களிப்பு மூலம் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகப்படுத்த முடியும் என்று கம்மின்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கோர தாண்டவமாடுகிறது. தினசரியும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோயாளிகளுக்கு மருந்து, ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவிற்கு உலக நாடுகள் பலவும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, பாகிஸ்தான் நாடுகள் மருந்துகள், மருத்துவக் கருவிகள், பிபிடி ஆடைகள் எனப் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் டி20 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ், இந்திய மக்களுக்கு ஆக்சிஜன் வாங்குவதற்கும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கும் 50 ஆயிரம் டாலர்களை பி.எம்.கேர்ஸ் நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அன்பான மக்கள்
இது தொடர்பாக பாட் கம்மின்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கடிதத்தில், ''இந்தியா நான் பல ஆண்டுகளாக மிகவும் நேசித்த நாடு. இதுநாள் வரை நான் சந்தித்ததிலேயே இங்குள்ள மக்கள் மிக அன்பானவர்கள், கனிவானவர்கள். கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகிவரும் இந்த நேரத்தில் மக்கள் பலரும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்பதை அறிந்தபோது மிகவும் வேதனையாக இருந்தது.

மன அழுத்தம் குறையும்
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமாக இருக்கும்போது, ஐபிஎல் டி20 போட்டிகள் நடத்துவது சரியானதுதானா என்றெல்லாம் சில ஆலோசனைகள், விவாதங்கள் ஓடின. என்னுடைய ஆலோசனை என்னவென்றால், இந்தக் கடினமான நேரத்தில் ஒவ்வொரு நாளும் லாக்டவுனில் இருக்கும் மக்கள் சில மணி நேரம் மகிழ்ச்சியாகவும், தங்களை மகிழ்ச்சிப்படுத்தவும் இந்த ஐபிஎல் டி20 தொடர் உதவுகிறது

ஆக்சிஜன் வாங்க உதவி
லட்சக்கணக்கான மக்களுக்கு நல்லவிதமாகப் பயன்பட வேண்டும் என்பதற்காக விளையாட்டு வீரர்களாகிய எங்களுக்குச் சிறப்பு உரிமை வழங்கப்பட்டு, அதற்கான தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதை மனதில் வைத்து தான் பி.எம். கேர்ஸ் நிதிக்கு நான் பங்களிப்பு செய்திருக்கிறேன். குறிப்பாக, நோயுற்ற மக்களுக்கு ஆக்சிஜன் வாங்கி மருத்துவமனைகளுக்கு வழங்க இந்த நிதி உதவட்டும். மற்ற வீரர்களும் இதேபோன்று தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க இது ஊக்கமாக அமையும்.

உதவி செய்யுங்கள்
என்னுடன் விளையாடும் சக வீரர்களும், உலகில் வேறு எங்கு வேண்டுமானாலும் இருந்து, இந்தியா மீது அன்பும், இரக்கமும் கொண்டிருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் பங்களிப்பு செய்யுங்கள். நான் 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களை அளித்து பங்களிப்பைத் தொடங்குகிறேன் என்று பதிவித்துள்ளார். பாட் கம்மின்ஸ் உதவிக்கு ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications