வடகிழக்கு மாநிலங்கள் என் இதயத்தின் ஒரு பகுதி.. மணிப்பூரில் விரைவில் அமைதி ஏற்படும்.. மோடி உறுதி
டெல்லி: எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்களை பேசி வருவதாகவும், விரைவில் மணிப்பூரில் அமைதி ஏற்படும் என்றும் வடகிழக்கு மாநிலங்கள் என் இதயத்தின் ஒரு பகுதி என்றும் உருக்கமாக பேசினார்.
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை மற்றும் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் உள்ளிட்டவை தேசத்தையே உலுக்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை பற்றி நாடாளுமன்றத்தில் எதுவும் இதுவரை எதுவும் கூறவில்லை.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இதுபற்றி பேச வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த ஜூலை 26 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தனர். 50 எம்பிக்களின் ஆதரவு இருந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சபாநாயகரும் ஒப்புதல் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை மக்களவையில் அதன் மீதான விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார். இரண்டு நாட்களாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவதம் நடைபெற்றது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் விவாதத்திற்கு பங்கேற்று பேசினர்.
இந்த நிலையில், இன்று 4.30 மணியளவில் பிரதமர் மோடி தனது பதிலுரையை பேச ஆரம்பித்தார். சுமார் 2 மணி நேரத்தை கடந்தும் மோடி பேசினார். இதற்கிடையே திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அப்போது பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து பேசினார். மோடி பேசியதாவது:- மணிப்பூர் விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் அமித்ஷா விளக்கம் அளித்தார்.
மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகள் மன்னிக்க முடியாதது. மணிப்பூரில் அமைதியை நிலை நாட்டுவதற்கான எந்த ஒரு முயற்சியையும் விட்டுவைக்க மாட்டோம். மணிப்பூர் விரைவில் வளர்ச்சி பாதையில் நடைபோடும். காங்கிரஸ் கட்சி தனக்கு வாக்களிக்காத மாநிலங்களை புறக்கணித்தது. வடகிழக்கு மாநிலங்கள் இன்று சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தாய் காங்கிரஸ் கட்சிதான்.
வடகிழக்கு மாநிலங்களின் நம்பிக்கையை கொலை செய்தது காங்கிரஸ் கட்சி. மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஏராளமான பொய்களை பேசி வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியின் போது அங்கு பள்ளிகளில் தேசியகீதம் ஒலித்தது இல்லை. இதுதான் காங்கிரஸ் கட்சியின் வரலாறு. வடகிழக்கு மாநிலங்கள் என் இதயத்தின் ஒரு பகுதி. தேசத்தின் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை.












Click it and Unblock the Notifications