சீனா AI-க்கு போயிடுச்சு! ஆனா நம்ம இன்னும் சாப்பாட்டு ஆப்களில் தான் இருக்கோம்! கோபப்பட்ட பியூஷ் கோயல்
டெல்லி: இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரும்பாலும் உணவுகளை டெலிவரி செய்வதிலேயே கவனம் செலுத்துவதாக விமர்சித்துள்ள வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார். மேலும், சீன ஸ்டார்அப் நிறுவனங்கள் ஏஐ போன்ற நவீனத் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே ஏகப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகி வருகிறது. மத்திய அரசு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அளித்து வரும் ஆதரவே இதற்கு முக்கிய காரணமாகும். அதேநேரம் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதில்லை என்ற விமர்சனங்கள் பரவலாக இருந்து கொண்டே இருக்கிறது.

பியூஷ் கோயல்
இதற்கிடையே இந்தியாவின் ஸ்டார்ட்அப் எக்கோ சிஸ்டத்தை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டில் உள்ள பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உணவு டெலிவரி, பெட்டிங் மற்றும் பேன்டஸி விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்தும் நிலையில், சீனாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இவி வாகனங்கள், பேட்டரி தொழில்நுட்பம், செமி கண்டெக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் சாதனை படைத்து வருவதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்டார்ட்அப் மகாகும்ப் என்ற நிகழ்ச்சியில் பேசிய பியூஷ் கோயல், தொழில்நுட்ப துறையில் ஆய்வு செய்வதற்குப் பதிலாக.. அதில் முன்னேறுவதற்குப் பதிலாகக் குறைந்த ஊதியம் தரும் டெலிவரி வேலைகளை மட்டுமே வைத்துக் கொண்டு நாடு திருப்தி அடைகிறதா என்ற சந்தேகம் எழுவதாகக் கேள்வி எழுப்பினார். மேலும் அவர், "நாம் ஐஸ்கிரீம் அல்லது சிப்ஸ் தயாரிக்க வேண்டுமா? சும்மா எதாவது பொருட்களை விற்க மட்டும் விரும்புகிறோமா?" என்று காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
மத்திய அரசின் தகவல்களின்படி இப்போது இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களுடன் இந்தியா மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் மையமாக உள்ளது. யூனிகார்ன் என்பது 1 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். இது தவிர சுமார் 1.57 லட்சம் ஸ்டார்ட்அப்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்தும் அவை செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களில் தேவையான கவனம் செலுத்தவில்லை என்பதே பியூஷ் கோயலின் விமர்சனமாக இருக்கிறது.
இதை எப்படி ஸ்டார்ட்அப் எனச் சொல்ல முடியும்
பியூஷ் கோயல் மேலும் பேசுகையில், "இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். டெலிவரி ஏஜெண்டுகளாக இருப்பதை நினைத்து இந்திய இளைஞர்கள் திருப்தி அடைய வேண்டுமா? அதுதான் இந்தியாவின் விதியா? இது ஸ்டார்ட்அப் அல்ல, இது ஒரு தொழில் அவ்வளவு தான்" என்றார்
சீன ஸ்டார்பட் அப் நிறுவனங்களை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பேசிய பியூஷ் கோயல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தில் சீனா முன்னணியில் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை மீண்டும் ஒரு முறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
டீப் டெக் நிறுவனங்கள்
தொடர்ந்து பேசிய பியூஷ் கோயல், "இப்போது இருக்கும் இந்திய ஸ்டார்ட்அப்கள் என்ன? நாம் உணவு டெலிவரி செலுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வேலையில்லாத இளைஞர்களைக் குறைந்த ஊதியத்திற்குக் கிடைக்கும் உழைப்பாளர்களாக மாற்றுகிறோம். இதனால் பணக்காரர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் தங்கள் உணவைப் பெற முடிகிறது.. அவ்வளவே!
இந்தியா இதுபோன்ற இ காமர்ஸ்ஸை தாண்டி புதுமைகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்திய ஸ்டார்ட் அப் துறையில் குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மட்டுமே டீப்-டெக் நிறுவனங்களாக உள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஸ்டார்ட் அப் இருக்கும் நமது நாட்டில் வெறும் 1000 ஸ்டார்ட்அப் மட்டுமே டீப்-டெக் துறையில் இருப்பது கவலை அளிக்கும் செய்தி.
எதிர்காலத்திற்காகத் தயாராக வேண்டும்
புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், எதிர்காலத்திற்கு நாட்டை தயார்ப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். சமீபத்தில் கூட ஒரு நல்ல ஸ்டார்ட் அப் ஐடியா இருந்துள்ளது. ஆனால் அதை வெறும் ரூ. 50 லட்சத்திற்கு வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்றுள்ளனர். இது குறித்து செய்தியை அறியும்போது மனது வேதனையாக இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications