இந்தோனேசியா விமான விபத்து.. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
டெல்லி: இந்தோனேசியாவில் எதிர்பாராத விதமாக நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களிலேயே ரேடார் தொடர்பிலிருந்து விமானம் மறைந்தது. தரை கட்டுப்பாட்டு நிலைய தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது.
மாயமான விமானம் ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் ஆகும். இந்த நிலையில் விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் இறங்கினர்
இந்தோனேசிய விமான விபத்து: 5 மூட்டைகளில் உடல் உறுப்புகள்.. 10 மூட்டைகளில் விமான பாகங்கள் கண்டெடுப்பு
இந்நிலையில ஜாவா கடலில் விமானத்தின் உடைந்த பாகங்கள், பயணிகள் சிலரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 5 மூட்டைகளில் உடல் உறுப்புகள் கிடைத்துள்ளன. அது போல் 10 மூட்டைகளில் விமான பாகங்கள் கிடைத்துள்ளன. கிடைத்த உடல்கள், உறுப்புகளை வைத்து இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் பயணிகளின் உறவினர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இதனால், விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது உறுதியாகியுள்ளது.
விமானம் கடலில் விழுந்து 24 மணி நேரத்திற்கும் மேலானதால் அதில் பயணித்த 62 பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதைதொடர்ந்து இந்தோனேசிய விமான விபத்துக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'இந்தோனேசியாவில் எதிர்பாராத விதமாக நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துக்கமான நேரத்தில் இந்தோனேசியாவுடன்இந்தியா துணைநிற்கும்' என கூறியுள்ளார்.