குப்பைகளில் இருந்து மின்சாரம்.. சிவகங்கை காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு!
டெல்லி: குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சிவகங்கை காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தமது மாதாந்திர மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று பேசியதாவது:
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இன்று மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்தநாள் என்பது நம்மனைவருக்கும் தெரியும். நமது தேசம் அவருடைய நினைவைப் போற்றும் வகையிலே இந்த நாளை தேசிய விளையாட்டுக்கள் தினமாகக் கொண்டாடவும் செய்கிறது.
என் மனதில் ஓர் எண்ணம்.... ஒரு வேளை மேஜர் தியான்சந்த் அவர்களின் ஆன்மா எங்கே இருந்தாலும், மிகவும் சந்தோஷத்தை அனுபவிக்கும் இல்லையா? ஏனென்றால் உலகெங்கிலும் ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் முரசை தியான்சந்த் அவர்களின் ஹாக்கி தான் ஓங்கி ஒலிக்கச் செய்தது.
நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் கழித்து, பாரதநாட்டின் இளைஞர்கள், ஆடவர் மற்றும் பெண்கள், ஹாக்கியில் மீண்டும் ஒரு முறை உயிரூட்டியிருக்கின்றார்கள். எத்தனைப் பதக்கங்கள் கிடைத்தாலும், ஹாக்கியில் பதக்கம் கிடைக்காத வரையில் பாரத நாட்டின் எந்த ஒரு குடிமகனுக்கும் முழுமையான ஆனந்தம் கிடைக்காது.

இந்த முறை ஒலிம்பிக்கில் ஹாக்கியில் பதக்கம் கிடைத்திருக்கிறது. அதுவும் நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கிறது. மேஜர் தியான்சந்த் அவர்களின் ஆன்மா எங்கே இருந்தாலும், அவருக்கு எத்தனை சந்தோஷமாக இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். தியான்சந்த் அவர்கள் தனது வாழ்க்கை முழுவதையும் விளையாட்டுக்கே அர்ப்பணம் செய்தார். ஆகையால் இன்று, தேசத்தின் இளைஞர்களில், நமது ஆடவர் பெண்களிடத்தில், விளையாட்டுக்கள் மீது அதிக ஆர்வம் காணக் கிடைக்கிறது. தங்களின் குழந்தைகள் விளையாட்டுக்களில் முன்னேறுகிறார்கள் எனும் போது தாய் தந்தையருக்கும் சந்தோஷம் ஏற்படுகிறது, இந்த உற்சாகம் தான் மேஜர் தியான்சந்த் அவர்களுக்கு நாம் அளிக்கக் கூடிய மிகப் பெரிய சிரத்தாஞ்சலிகள்.
நண்பர்களே, விளையாட்டுக்கள் பற்றிப் பேசும் வேளையில், இயல்பாகவே நம் முன்பாக இளைஞர்களின் தலைமுறை முழுவதும் தெரிகிறது. இவர்களை நாம் உற்று நோக்கினோம் என்றால், அவர்களில் தான் எத்தனை மாற்றங்களைக் காண முடிகிறது! இளைஞர்களின் மனம் மாறிவிட்டது. இன்றைய இளைஞர்களின் மனங்கள் பழமைவாதமான வழிமுறைகளை விட்டு விலகி, புதிய ஒன்றை சாதிக்க விரும்புகின்றன. இன்றைய இளைஞர்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் பாதைகளில் பயணிக்க விரும்புவதில்லை. தாங்களே ஏற்படுத்திக் கொண்ட புதிய பாதைகளில் பயணிக்க விரும்புகிறார்கள். இதுவரை யாரும் செல்லாத பாதைகளில் பயணிக்க நினைக்கிறார்கள். இலக்கும் புதியது, பாதையும் புதியது, விருப்பமும் புதியது.....ஒரு முறை மனதில் முடிவெடுத்துவிட்டார்கள் என்றால், இளைஞர்கள் அதிலே முழுமனதோடு ஈடுபட்டுவிடுகிறார்கள். இரவு பகலாகப் பாடுபடுகிறார்கள். நாமே கூட பார்த்திருக்கிறோம்....
சில காலம் முன்பாகத் தான், பாரதம் தனது விண்வெளித்துறையைத் திறந்து விட்டது, பார்த்துக் கொண்டே இருக்கும் வேளையில் இளைய தலைமுறையினர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்கள், கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள், தனியார் துறையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் எல்லாம் மிக உற்சாகத்தோடு முன் வந்தார்கள். இனிவரும் காலங்களில், நாம் செலுத்தவிருக்கும் பெரும்பாலான செயற்கைக்கோள்களில் நமது கல்லூரிகளின், பல்கலைக்கழகங்களின், பரிசோதனைக் கூடங்களில் பணியாற்றும் மாணவர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.
இதே போன்று இன்று எங்கு பார்த்தாலும், எந்தக் குடும்பத்தில் நோக்கினாலும், அது எத்தனைதான் நிறைவான குடும்பமாக இருந்தாலும் சரி, நன்கு படித்த குடும்பமாக இருந்தாலும் சரி, குடும்பத்தில் இளைஞர்களிடம் பேசிப் பார்த்தால் என்ன கூறுகிறார்? அவர் தனது குடும்பப் பாரம்பரியங்களிலிருந்து விலகி, நான் ஸ்டார்ட் அப் தொடங்கப் போகிறேன் என்கிறார். அதாவது ஆபத்தை எதிர்கொள்ளும் சாகஸ உணர்வு அவர்கள் மனதிலே இருக்கிறது. இன்று சின்னச் சின்ன நகரங்களிலும் கூட இந்த ஸ்டார்ட் அப் கலாச்சாரம் விரிவடைந்து வருகிறது. இதை நான் பிரகாசமான எதிர்காலத்திற்கான சங்கேதமாகவே காண்கிறேன். சில நாட்கள் முன்பாக நமது தேசத்தில் விளையாட்டு பொம்மைகள் பற்றிய விவாதம் நடைபெற்றது. சில காலத்திலேயே நமது இளைஞர்களின் கவனம் இந்த விஷயத்தில் சென்றது, உலகில் பாரதத்தை விளையாட்டுப் பொருட்களோடு அடையாளப்படுத்துவது என்று அவர்கள் உறுதி செய்து கொண்டார்கள். புதிய புதிய பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள், உலகில் விளையாட்டுச் சாமான்களுக்கென ஒரு மிகப் பெரிய சந்தை உள்ளது, 6-7 இலட்சம் கோடி பெறுமானமுள்ள சந்தை இது. இன்று இதிலே பாரதத்தின் பங்கு மிகவும் குறைவு.
ஆனால், விளையாட்டுப் பொருட்களை எவ்வாறு செய்வது, அவற்றிலே இருக்கும் ரகங்கள் என்ன, தொழில்நுட்பம் என்னவாக இருக்கலாம், குழந்தைகளின் மனோவியலுக்கு ஏற்ப அவற்றை எவ்வாறு தயாரிப்பது போன்ற விஷயங்களின் இன்று நமது தேசத்தின் இளைஞர்கள் தங்கள் கவனத்தைக் குவித்திருக்கிறார்கள், தாங்கள் பங்களிக்க விரும்புகிறார்கள். நண்பர்களே, மேலும் ஒரு விஷயம், இது மனதை சந்தோஷங்களால் நிரப்பிவிடுகிறது, நம்பிக்கையை மேலும் வலுவடையச் செய்கிறது. நீங்களும் இதை கவனித்திருக்கலாம். பொதுவாக நம்நாட்டிலே இருக்கும் இயல்பு...... ஏதோ நடக்குது, ஏதோ சுமாரா இருக்கு என்பதே. ஆனால் எனது தேசத்தின் இளைஞர்கள் தங்கள் மனதிலே மிகச் சிறப்பான தரம் என்பதை நோக்கி முனைப்போடு இருக்கிறார்கள். மிகச் சிறப்பாகச் செய்ய விரும்புகிறார்கள், மிகச் சிறப்பான வகையிலே செய்ய விழைகிறார்கள். இதுவும் தேசத்தின் மிகப் பெரிய சக்தி என்ற வகையில் பரிமளிக்கும்.
நண்பர்களே, இந்த முறை ஒலிம்பிக்ஸ் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. ஒலிம்பிக்ஸ் விளையாட்டு முடிந்து இப்போது பேராலிம்பிக்ஸ் நடந்து வருகிறது. தேசத்தில் நமது இந்த விளையாட்டு உலகில் எது நடந்திருந்தாலும், உலகத்தோடு ஒப்பிடுகையில் குறைவானதாக இருக்கலாம் ஆனால், நம்பிக்கை ஊட்டும் வகையில் நிறையவே நடந்திருக்கிறது. இன்று இளைஞர்கள், விளையாட்டுக்களை ரசிக்க மட்டுமே செய்கிறார்கள் என்பதல்ல; அவர்கள் அவற்றோடு தொடர்புடைய சந்தர்ப்பங்களையும் கவனிக்கிறார்கள். அதன் ஒட்டுமொத்த சூழல் அமைப்பையும், மிக நுணுக்கமாகப் பார்க்கிறார்கள், அவற்றின் வல்லமையைப் புரிந்து கொள்கிறார்கள், ஏதோ ஒரு வகையிலே தன்னை அவற்றோடு இணைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் வாடிக்கையான விஷயங்களை விடுத்து முன்னேறிச் சென்று, புதிய கிளைகளையும் தங்களுடைய தாக்கிக் கொண்டு வருகிறார்கள். நாட்டின் இனியமக்களே, இந்த அளவுக்கு விரைவு வந்திருக்கும் வேளையிலே, குடும்பங்களில் விளையாட்டுக்கள் குறித்த விவாதங்கள் தொடங்கி இருக்கின்றன.
நீங்களே சொல்லுங்களேன்.... இந்த விரைவினை நாம் தணிக்க வேண்டுமா, தடைப்படுத்த வேண்டுமா? கண்டிப்பாகக் கூடாது. நீங்களும் என்னைப் போன்றே தான் சிந்திப்பீர்கள். இப்போது தேசத்திலே விளையாட்டுக்கள், போட்டித் தன்மை, விட்டுக்கொடுக்கும் தன்மை இவற்றை நாம் தடுக்கக்கூடாது. இந்த விரைவினை நாம் குடும்பவாழ்க்கையில், சமூக வாழ்க்கையில், தேசிய வாழ்க்கையில், நிலையானதாக்கிக் கொள்ள வேண்டும். ஆற்றலை இட்டு நிரப்ப வேண்டும், தொடர்ந்து புதிய சக்தியை ஊட்டி வர வேண்டும். வீடாகட்டும், வெளியிலாகட்டும், கிராமமாகட்டும், நகரமாகட்டும், நமது விளையாட்டு மைதானங்கள் நிரம்பி வழிய வேண்டும், அனைவரும் விளையாட வேண்டும், மலர வேண்டும். உங்களுக்கெல்லாம் நினைவிருக்கிறது இல்லையா.... நான் செங்கோட்டையிலிருந்து சொன்னேனே.... அனைவருடைய முயற்சி. ஆம், அனைவருடைய முயற்சி. அனைவரின் முயற்சிகளினால் தான், பாரதம் விளையாட்டுத் துறையில், நம் உரிமைப் பொருளான உச்சியை சென்றடைய முடியும். மேஜர் தியான்சந்த் அவர்கள் போன்றோர் வகுத்தளித்த வழியினிலே, நாம் முன்னேறிச் செல்வது நமது கடமையாகும்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தேசத்தில் ஒரு காலகட்டம் வந்திருக்கிறது, இப்போது விளையாட்டுக்களிடத்திலே குடும்பங்களும், சமுதாயமும், மாநிலமும், தேசமும், ஒரே மனதோடு அனைவரும் இணைந்து வருகிறார்கள்.
எனக்குப் பிரியமான இளைஞர்களே, நாம் இந்த சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, பல்வேறு விளையாட்டுக்களில் தேர்ச்சி பெற வேண்டும். கிராமங்கள் தோறும், விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வரவேண்டும். போட்டிகளின் மூலம் தான் விளையாட்டுக்கள் விரிவாக்கம் பெறும், மலர்ச்சி அடையும், விளையாட்டு வீரர்கள்களும் உருவாவார்கள், உயர்வார்கள். நாட்டு மக்கள் நாமனைவரும் இந்த விரைவினை எத்தனை முன்னேற்ற முடியுமோ, அந்த அளவுக்கு நமது பங்களிப்பை நல்குவோம், அனைவரின் முயற்சி என்ற இந்த மந்திரத்தை மெய்ப்பித்துக் காட்டுவோம்.
எனதருமை நாட்டு மக்களே, நாளை ஜன்மாஷ்டமி புனிதப் பண்டிகையும் கூட. ஜன்மாஷ்டமி என்ற இந்தப் புனித நன்னாள், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த புனித நாள். நாம் பகவானின் அநேக ரூபங்களை அறிந்திருக்கிறோம், விஷமங்கள் நிறைந்த கன்ஹையா முதல் விராடரூபியான கிருஷ்ணர், சாஸ்திரங்களின் வித்தகரான கிருஷ்ணன் வரை. கலையாகட்டும், அழகாகட்டும், இனிமையாகட்டும், இங்கெல்லாம் கிருஷ்ணன் இருக்கிறான். இவற்றை எல்லாம் நான் ஏன் கூறுகிறேன் என்றால், ஜன்மாஷ்டமிக்கு சில நாட்கள் முன்பாக, நான் ஒரு சுவாரசியமான அனுபவத்தை ரசித்தேன், இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று என் மனம் விழைகிறது. இந்த மாதம் 20ஆம் தேதியன்று பகவான் சோமநாதரின் கோயிலோடு தொடர்புடைய கட்டுமானப் பணிகளை நான் நாட்டு மக்களுக்கு அர்ப்பணம் செய்தேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். சோமநாதர் ஆலயத்திலிருந்து 3-4 கிலோமீட்டர் தொலைவில் தான் பாலகா தீர்த்தம் உள்ளது. இந்த பாலகா புனித இடத்தில் தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பூமியில் தனது இறுதிக் கணங்களைக் கழித்தார். ஒரு வகையில் இந்த உலகில் அவருடைய லீலைகள், அங்கே நிறைவு பெற்றன.
சோமநாதர் அறக்கட்டளை வாயிலாக இந்தப் பகுதியின் வளர்ச்சியில் பல பணிகள் நடைபெற்று வருகின்றன. நான் பாலகா தலத்திலும், இங்கே நடைபெறும் பணிகள் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்த போது, எனது பார்வை, ஓர் அழகான கலைப் புத்தகத்தின் மீது விழுந்தது. இந்தப் புத்தகத்தை என் வீட்டுக்கு வெளியே யாரோ விட்டுச் சென்றிருந்தார்கள். இதில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பலரூபங்கள், அநேக அற்புதமான படங்கள் இருந்தன. மனதைக் கொள்ளை கொள்ளும் படங்கள் அதிலே இருந்தன, அர்த்தமுள்ள ஓவியங்களும் இருந்தன. நான் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டத் தொடங்கினேன், என்னுடைய ஆவல் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. அந்தப் புத்தகத்தில் இருந்த அனைத்துப் படங்களையும் நான் பார்த்து முடித்த போது, அதிலே எனக்கு ஒரு செய்தி எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்த உடன் அந்தச் செய்தியை எழுதியவரை நான் சந்திக்க வேண்டும் என்று என் மனம் அவாவியது. என் வீட்டின் வாயிலிலே புத்தகத்தை விட்டுச் சென்றவரை நான் சந்திக்க வேண்டும்.
என் அலுவலகத்தார் அவரோடு தொடர்பு கொண்டார்கள். இரண்டாம் நாள் அன்றே அவருக்கு அழைப்பு விடுத்தார்கள், ஸ்ரீகிருஷ்ணரின் பல்வேறு ரூபங்களையும், அந்தக் கலைப்புத்தகத்தையும் பார்த்த பின்னர் என் ஆவல் இந்த அளவுக்கு பேராவலாக வளர்ந்திருந்தது. இந்தப் பெருவிருப்பத்தோடு நான் ஜதுரானீதாஸி அவர்களை சந்தித்தேன். அவர் அமெரிக்கர், அங்கே பிறந்தவர், வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவிலே தான், ஜதுரானீதாஸீ அவர்கள் இஸ்கானோடு தொடர்புடையவர், ஹரேகிருஷ்ணா இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர், அவருடைய மிகப்பெரிய விசேஷம் என்னவென்றால், பக்திக்கலைகளில் அவர் நிபுணர். உங்களுக்கே தெரியும், இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியன்று இஸ்கான் அமைப்பின் நிறுவனரான ஸ்ரீலஸ்ரீபிரபுபாதஸ்வாமி அவர்களின் 125ஆம் பிறந்த நாள் வருகிறது. ஜதுரானீதாசீ அவர்கள் இதனை ஒட்டி பாரதம் வந்திருக்கிறார். என் முன்னே எழுந்த பெரிய கேள்வி என்னவென்றால், எவருடைய பிறப்பு அமெரிக்காவில் நிகழ்ந்ததோ, எவர் பாரதீய உணர்வுகளோடு தொலைவாக இருந்தாரோ, அவர் எப்படி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மீது இத்தனை பிரேமை கொண்ட ஓவியங்களை உருவாக்கி இருக்கிறார் என்பது தான்.
மிக நீண்ட நேரம் நான் அவரோடு உரையாடினேன் ஆனால் அதன் ஒரு சிறு பகுதியை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மோதிஜி: ஜதுரானிஜி, ஹரே கிருஷ்ணா! பக்திக்கலை பற்றி நான் ஏதோ கொஞ்சம் படித்திருக்கிறேன், ஆனால் நமது நேயர்களுக்கு இது பற்றி மேலும் கூறுங்கள். இதன் மீது உங்களுடைய பேரார்வமும், பெருவிருப்பமும் அருமை.
ஜதுரானீஜீ: இப்ப இந்த பக்திக்கலைன்னும் போது இந்த ஒளிர்வுகள் எல்லாம் இந்தக் கலை மனதிலிருந்தோ, கற்பனையிலிருந்தோ வரலை, இது பண்டைய வேதநூல்களான ப்ரும்மச்ம்ஹிதைலேர்ந்து வருதுங்கறதை, கோஸ்வாமியுடைய விருந்தாவனத்திலிருந்து, பிரும்மதேவனிடமிருந்து வருதுங்கறதை தெளிவுபடுத்த விரும்பறேன். எப்படி அவரு புல்லாங்குழலை ஏந்தி இருக்காரு, எப்படி அவருடைய புலன்கள் ஒன்றுக்கு பதிலாக இயங்கும் சக்தி உடையவை.....அவரு தன்னோட காதில கர்ணிகா மலரை அணிஞ்சுக்கிட்டு, அவருடைய தாமரை மலர்ப் பாதங்களைக் கொண்டு விருந்தாவன் பூமியில தடங்களைப் பதிக்கறாரு, ஆயர்கள் அவருடைய புகழைப் பாடுறாங்க, அவருடைய குழலோசை அனைத்து பாக்கியசாலிகளுடைய இதயங்களையும் மனங்களையும் கொள்ளை கொள்ளுது. ஆக, அனைத்துமே பண்டைய வேத நூல்கள்லேர்ந்து எடுக்கப்பட்டன; இந்த நூல்களோட சக்தி எல்லாம் புனிதமான நபர்கள்கிட்டேர்ந்தும், தூயபக்தர்கள் கிட்டேர்ந்தும் கிடைக்குது, இவர்கள் தான் இந்தக் கலைக்கு சக்தி அளிக்கறவங்க, ஆகையாலதான் இது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது, இதுல என்னோட சக்திங்கறது எதுவுமே இல்லை.
மோதிஜி: ஜதுரானீஜி, என்கிட்ட ஒரு வித்தியாசமான வினா இருக்கு. 1966லேர்ந்து, ஒரு வகையில 1976லேர்ந்து நீங்க இந்தியாவோட தொடர்பு உடையவரா இருக்கீங்க. உங்க மனசுல இந்தியாவுக்கு என்ன மகத்துவம்?
ஜதுரானீஜீ: பிரதம மந்திரி அவர்களே, இந்தியா தான் எனக்கு எல்லாமே. சில நாட்கள் முன்னாலதான்னு நினைக்கறேன், நான் மாண்புமிகு குடியரசுத்தலைவர் கிட்ட சொன்னேன், இந்தியாவில ஏகப்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு, டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஐ ஃபோன்கள், பெரிய பெரிய கட்டிடங்கள், பல வசதிகள்ல எல்லாம் மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றிக்கிட்டு இருக்கு. ஆனா இதெல்லாம் இந்தியாவோட உண்மையான பெருமை இல்லை. இந்தியாவோட பெருமைன்னு சொன்னா, இந்த பூமியில தான் கிருஷ்ணன் அவதாரம்ஞ்சான், எல்லா அவதாரங்களுமே இங்க தான் நடந்திருக்கு. சிவபெருமான் தோன்றியிருக்காரு, ஸ்ரீஇராமன் தோன்றியிருக்காரு, எல்லா புனித நதிகளும் இங்க இருக்கு, வைணவத்தோட எல்லா புனித இடங்களும் இந்தியாவுல இருக்கு, குறிப்பா விருந்தாவன் தான் உலகத்திலேயே மிக முக்கியமான ஓர் இடம். விருந்தாவனம்தான் வைகுந்தக் கோள்களோட தோற்றம், துவாரகையோட ஆதாரம், உலகத்தின் பருப்பொருள் படைப்பின் தோற்றுவாய், அதனால நான் இந்தியாவை நேசிக்கறேன்.
மோதிஜி: ரொம்ப நன்றி ஜதுரானீஜி. ஹரேகிருஷ்ணா!
நண்பர்களே, உலக மக்கள் இன்று பாரதீய ஆன்மீகம் மற்றும் தத்துவம் பற்றி இந்த அளவுக்கு சிந்திக்கிறார்கள். அந்த வகையில் இந்த மகத்தான பாரம்பரியங்களை முன்னெடுத்துச் செல்வது நம் அனைவரின் பொறுப்பல்லவா? வழக்கொழிந்து போனவற்றை நாம் விடுக்கத்தான் வேண்டும், ஆனால் எவை காலத்தைக் கடந்து நிற்பதோ, அவற்றை நாம் முன்னெடுத்துச் செல்லத்தான் வேண்டும். நாம் நமது பண்டிகையைக் கொண்டாடுவோம், அதன் அறிவியல் தன்மையைப் புரிந்து கொள்வோம், அதன் பின்னணியில் இருக்கும் பொருளை அறிந்து கொள்வோம். இது மட்டுமல்ல, ஒவ்வொரு பண்டிகையிலும் ஏதோ ஒரு செய்தி பொதிந்திருக்கும், ஏதோ ஒரு நல்ல பதிவு இருக்கும். நாம் இதனையும் புரிந்தும் கொள்ள வேண்டும், வாழவும் வேண்டும், வருங்காலத் தலைமுறையினருக்கு, நமது பாரம்பரியம் என்ற முறையிலே கொண்டு சேர்க்கவும் வேண்டும். நான் மீண்டும் ஒரு முறை நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜன்மாஷ்டமிக்கான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மனம் நிறைநாட்டு மக்களே, இந்தக் கொரோனா காலகட்டத்திலே தூய்மை விஷயம் தொடர்பாக எத்தனை பகிர வேண்டும் என்று நினைத்தேனோ, அதில் சற்று குறைவுபட்டுப் போய்விட்டது. தூய்மை இயக்கத்தை நாம் சற்றும் கூடத் தொய்வடைய வைக்கக்கூடாது என்பதே என் கருத்து.
தேச உருவாக்கத்தின் பொருட்டு அனைவரின் முயற்சி, எப்படி அனைவருக்கும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு நமக்கு உத்வேகமும் அளிக்கும், புதிய முயற்சியில் ஈடுபடத் தேவையான புதிய சக்தியை நிரப்பும், புதிய நம்பிக்கையையும் உருவாக்கும், நமது உறுதிப்பாடுகளில் உயிர்ப்பையும் ஏற்படுத்தும்.
நாம் தூய்மை பாரதம் இயக்கம் பற்றிப் பேசும் போது, இந்தோர் நகரம் பற்றிப் பேசியே ஆக வேண்டும் ஏனென்றால், இந்தோரில் தூய்மை தொடர்பாக ஒரு சிறப்பான அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்தோர்வாசிகள் இதற்கான சிறப்புப் பாராட்டுக்கு உரியவர்கள். நம்முடைய இந்தோர் பல்லாண்டுகளாகவே தூய்மை பாரத தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இப்போது இந்தோரின் மக்கள் தூய்மை பாரதம் இயக்கத்தின் இந்தத் தரவரிசையோடு நிறைவடைய விரும்பவில்லை, முன்னேற நினைக்கிறார்கள். புதிய ஒன்றைச் செய்ய விழைகிறார்கள். Water Plus நகரமாக இந்தோரை ஆக்க வேண்டும் என்று தீர்மானம் செய்துவிட்டார்கள், இதற்காக முழு முனைப்போடு செயல்பட்டு வருகிறார்கள். Water Plus நகரம், அதாவது சுத்திகரிப்பு ஏதும் செய்யப்படாமல், எந்த ஒரு சாக்கடையும் பொது நீர்நிலையில் கொண்டு சேர்க்கப்படாது. இந்நகரின் குடிமக்கள் அனைவரும் தாங்களே முன்வந்து குழாய்களை சாக்கடைக் குழாய்களோடு இணைத்திருக்கிறார்கள். தூய்மை இயக்கத்தையும் செயல்படுத்தியிருக்கிறார்கள்,
இதன் காரணமாக சரஸ்வதி மற்றும் கான்ஹ் நதிகளில் கலக்கும் மாசுபட்ட நீரும் கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கிறது, மேம்பட்ட காட்சி புலப்படுகிறது. இன்று நமது தேசம் சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தைக் கொண்டாடும் வேளையில், தூய்மை பாரதம் இயக்கம் என்ற உறுதிப்பாட்டை நாம் என்றுமே மந்தமாக விடக்கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நம்முடைய தேசத்தில் எத்தனைஅதிக நகரங்கள் Water Plus நகரங்களாகஆகின்றனவோ, அந்த அளவுக்குத் தூய்மையும் அதிகரிக்கும், நமது நதிகளும் தூய்மையாகும், நீரைப் பாதுகாக்கும் ஒரு மனிதக்கடமையை நிறைவேற்றும் நல்ல பழக்கமும் உருவாகும்.
நண்பர்களே, பிஹாரின் மதுபனியிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மதுபனியில் டாக்டர்ராஜேந்திரபிரசாத் விவசாயப் பல்கலைக்கழகமும், அங்கே இருக்கும் வட்டார விவசாய விஞ்ஞான மையமும் இணைந்து ஒரு நல்ல முயல்வை மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் பயன் விவசாயிகளுக்கு கிடைக்கிறது, தவிர இதனால் தூய்மை பாரத இயக்கத்துக்கும் புதியதொரு சக்தியும் கிடைக்கிறது. பல்கலைக்கழகத்தின் இந்த முன்னெடுப்பின் பெயர் சுகேத் மாடல். அதாவது நல்வேளாண் மாதிரி. இதன் நோக்கம் என்னவென்றால், கிராமங்களில் மாசு உண்டாவதைக் குறைப்பது. இந்த மாதிரியின்படி, கிராமங்களின் விவசாயிகளிடமிருந்து பசுஞ்சாணம் மற்றும் வயல்கள்-வீடுகளிலிருந்து வெளிப்படும் குப்பைக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, இதற்கு ஈடாக கிராமமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான பணம் கொடுக்கப்படுகிறது. திரட்டப்படும் கிராமப்பகுதிக் குப்பைகளை மண்புழு உரமாக மாற்றும் பணியும் செய்யப்பட்டு வருகிறது.
அதாவது இந்த நல்வேளாண்மாதிரியால் நான்கு ஆதாயங்கள் நம் நேரடிப் பார்வைக்குப் புலப்படுகின்றன. ஒன்று, கிராமங்கள் மாசடையாமல் இருத்தல், இரண்டாவது, குப்பைகளிலிருந்து விடுதலை, மூன்றாவது, கிராமவாசிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான பணம், நான்காவதாக, கிராமங்களின் விவசாயிகளுக்கு இயற்கை உரம். நீங்களே சிந்தியுங்கள், இதுபோன்ற முயற்சிகள் நமது ஊரகப்பகுதிகளின் சக்தியை எத்தனை அதிகரிக்கமுடியும்!! இதுதான் தற்சார்பு. நான் தேசத்தின் ஒவ்வொரு பஞ்சாயத்திடத்திலும் என்ன கூறுகிறேன் என்றால், நீங்களும் இதுபோல உங்கள் தரப்பில் செய்யத் தலைப்படுங்கள். மேலும் நண்பர்களே, நாம் ஒரு இலக்கை மனதில் தாங்கிப் பயணிக்கும் போது, கண்டிப்பாக நல்ல விளைவுகள் ஏற்படத்தான் செய்யும்.
நமது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் காஞ்சிரங்கால் பஞ்சாயத்தையே எடுத்துக் கொள்வோமே! இந்தச் சிறிய பஞ்சாயத்து என்ன செய்திருக்கிறது, நீங்களே பாருங்கள். கழிவிலிருந்து செல்வம் என்பதற்கான மேலும் ஒரு மாதிரி இங்கே உங்களுக்குக் கிடைக்கும். இங்கே, கிராமப்பஞ்சாயத்து, உள்ளூர் மக்களோடு இணைந்து குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஓர் உள்ளூர் செயல்திட்டத்தினை அமல் செய்திருக்கிறது. கிராமம் முழுவதிலிருந்தும் குப்பைகள் திரட்டப்படுகின்றன, இதீலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, மீதம் தங்கும் பொருட்கள் கிருமிநாசினியாக விற்பனை செய்யப்படுகின்றன. கிராமத்தின் இந்த மின்னாலையின் திறன் ஒவ்வொரு நாளும் 2 டன்கள் குப்பைகளைப் பதப்படுத்துகிறது. இதனால் உற்பத்தியாகும் மின்சாரம் கிராமத்தின் தெருவிளக்குகளுக்கும், இன்னும் பிற தேவைகளுக்கும் பயனாகிறது. இதனால் பஞ்சாயத்தின் பணம் மிச்சமாவதோடு, இந்தப் பணம் வேறு வளர்ச்சிப்பணிகளுக்கு உதவிகரமாகவும் இருக்கிறது. இப்போது நீங்களே சொல்லுங்கள், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் ஒரு சின்ன பஞ்சாயத்து, ஒன்றை செய்து காட்டவேண்டும் என்ற கருத்தூக்கத்தை நம்மனைவருக்கும் அளிக்கிறது இல்லையா?
அருமையாகச் செய்து காட்டியிருக்கிறார்கள் இவர்கள்! இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications