கொரோனா பரவல் ஆலோசனை கூட்டம்... பிரதமர் மோடியின் மேற்கு வங்க பிரசார பயணம் ரத்து
டெல்லி: கொரோனா பரவல் தொடர்பான உயர்மட்டக் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் இருப்பதால் பிரதமர் மோடி தனது மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டில் தினசரி கொரோனா பரவல் மூன்று லட்சத்தைத் தாண்டியது.

கொரோனா பரவல் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, ராகுல் காந்தி ஆகியோர் தங்கள் மேற்கு வங்க பிரசாரத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும், மீதமுள்ள மூன்று கட்டங்களையும் இணைத்து ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்தவும் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியது. இருப்பினும், இந்த கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை.
கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் நிலையிலும் பாஜக தலைவர்கள் தேர்தலுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்துத் தொடர்ந்து பிரசாரம் செய்து வருவதாக திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இந்நிலையில், பிரதமர் மோடி தனது மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், கொரோனா பரவல் தொடர்பான உயர்மட்டக் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நாளை எனது தலைமையில் நடைபெறுகிறது. இதனால் என்னால் மேற்கு வங்கத்திற்குச் செல்ல இயலாது" என ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் மோடி நாளை மேற்கு வங்கத்தில் நான்கு இடங்களில் பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேச இருந்தார்.












Click it and Unblock the Notifications