நாடாளுமன்ற அவைக்கே வராத ஒருவருக்கு எப்படி நான் பதில் அளிக்க முடியும்?.. ராகுலை விமர்சித்த பிரதமர்!
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர்களுக்கு வராத ஒருவருக்கு நான் எப்படி பதிலளிக்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார்.
இந்திய சீனா எல்லை பிரச்சினை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்கவில்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் கூறுகையில் நாடாளுமன்றத்தில் விவாதங்களை நான் வரவேற்கிறேன். நானும் எனது அரசும் யாரையும் விமர்சித்து பேச மாட்டோம். அது போல் எனக்கு பேச தெரியாது. அது எனது இயல்பான குணமும் இல்லை. பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இருக்கிறது.
உலகின் மிக மூத்த மொழியாக தமிழ் திகழ்கிறது என்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் - பிரதமர் மோடி
ராஜ்யசபா
லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது வேலையின்மை, இந்தியா சீனா விவகாரம், பணவீக்கம் குறித்து பதிலளிக்காமல் காங்கிரஸை மட்டும் நான் விமர்சித்ததாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டை பற்றி கேட்கிறீர்கள்.
நம்பிக்கை
எப்போதுமே ஒருவரை தாக்கி பேசும் விமர்சனங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நாடாளுமன்றத்தில் வாதம், விவாதங்கள், இடையூறுகள் இருந்தன. இந்தியா சீனா எல்லை பிரச்சினை, வேலையின்மை உள்ளிட்டவை குறித்து உண்மை நிலவரத்தை நானே விளக்கமளித்துவிட்டேன். உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு துறை அமைச்சகம் உள்ளிட்டவை தொடர்புடைய கேள்விகளுக்கு அந்தந்த துறையினர் விளக்கமளித்தார்கள்.
லோக்சபா
நான் சொல்வதை கவனிக்காத, நாடாளுமன்றத்திற்கே வராத ஒருவருக்கு எப்படி பதில் சொல்ல முடியும்? என கேள்வி எழுப்பினார். கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி லோக்சபாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய போது வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், இந்திய சீன எல்லை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.
பிரித்தாளும் சூழ்ச்சி
கடந்த 7ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவில் பேசுகையில் காங்கிரஸ் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறது. சிறிய சிறிய கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவனாகிவிட்டது. காங்கிரஸ் இல்லாமல் இருந்திருந்தால் அவசர நிலை இருந்திருக்காது, ஜாதி அரசியல் இருந்திருக்காது, சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என விமர்சித்திருந்தார்.
லோக்சபாவில் பிரதமர்
மேலும் "பாஜக அரசுக்கு காங்கிரஸை பார்த்தாலே ஒரு வித பயம் என்பது லோக்சபாவில் பிரதமர் பேசியதிலேயே எதிரொலித்தது. அந்த பயத்தின் வெளிப்பாடுதான், பாஜக அளித்த வாக்குறுதிகள் குறித்து பேசாமல் காங்கிரஸை விமர்சனம் செய்துள்ளது" என ராகுல் காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.