பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி.. டிஜிபி மீது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு குற்றச்சாட்டு! பரபர வாதம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பஞ்சாப் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 42,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். மோசமான வானிலை காரணமாக பிரதமர் ஹெலிகாப்டரில் செல்லாமல் சாலை மார்க்கமாக சென்றார்.
பதிண்டா என்ற இடத்தில் சென்றபோது விவசாயிகள் அந்த பகுதியில் மறியலில் ஈடுபட்டதால் பிரதமர் வாகனம் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. இதனால பதிண்டா பகுதி மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்வாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது.

பாதியில் திரும்பிய பிரதமர்
இந்த பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் மோடி தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேர்ந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே விசராணை நடந்து வருகிறது.

உச்சநீதிமன்றம் அவசரமாக விசாரணை
உச்சநீதிமன்றம் இதனை அவசர வழக்காக விசாரித்து வருகிறது. பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் விவகாரத்தில் என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏற்கனவே முறையிட்டது. பாதுகாப்பு மீறல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். நீதிமன்றம் என்ன நினைக்கிறதோ அதைச் செய்யலாம் என்று பஞ்சாப் அரசும் கூறியது.

மத்திய அரசு பரபர குற்றச்சாட்டு
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. அப்போது பஞ்சாப் டிஜிபி மீது மத்திய அரசு பரபர குற்றச்சாட்டுகளை கூறியது. பாதுகாப்பு குளறுபடி தொடர்பு காரணமாகத்தான் இந்த குழப்பம் ஏற்படுத்திள்ளது என்றும் போராட்டம் நடைபெற்றது குறித்த தகவலை டிஜிபி பகிரவில்லை என்று மத்திய அரசு தரப்பில் கடுமையான வாதம் முன்வைக்கப்பட்டது.

அனைத்தும் தோல்வி அடைந்து விட்டது
பிரதமர் செல்லும் சாலை தெளிவாக இருக்கிறது என்று எங்களிடம் கூறப்பட்டது. இந்த சாலையில் ஏதும் போராட்டம் உள்ளிட்ட பிரச்சினை இருந்தால் 4 கிமீ தொலைவுக்கு முன்பே பிரதமரின் வாகனத்தை நிறுத்தும் வகையில் மாநில அரசின் தகவல் தொடர்பு இருக்க வேண்டும். அனைத்தும் தோல்வி அடைந்து விட்டது என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். சம்பவ இடத்தில் காலையிலேயே மக்கள் கூட்டம் திரள ஆரம்பித்தது. மேம்பாலத்தில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை பிரதமரின் கான்வாய்க்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications