இந்திரா காந்தியின் சாதனையை தொட்டு புதிய சரித்திரம் படைத்தார் பிரதமர் மோடி!
லோக்சபா தேர்தலில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நிகழ்த்திய சாதனையை தொட்டு பிரதமர் மோடி புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
டெல்லி:நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. இதில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு தேர்தலிலும் 282 இடங்களை பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் 295 இடங்கள் வரை பாஜகவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில், தனிப்பெரும்பான்மை பெறுவதில் பிரதமர் மோடி புதிய சரித்திரம் படைத்துள்ளார்.

ஆம். 48 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து இரண்டு முறைஆட்சி அமைக்கும் பெருமையை பிரதமர் மோடி பெற்றிருக்கிறார். 1967 மற்றும் 1971ம் ஆண்டு தேர்தல்களில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்தார். 1980ம் ஆண்டிலும் இந்திரா காந்தி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தார்.
இந்த நிலையில், தொடர்ந்து இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பெருமையை இந்திரா காந்திக்கு பின்னர் பிரதமர் மோடி பெற்றிருக்கிறார். மேலும், முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்திக்கு பின்னர் இந்த சாதனையை படைக்கும் மூன்றாவது பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றிருக்கிறார்.
1951ம் ஆண்டு நடந்த இந்தியாவின் முதல் லோக்சபா தேர்தலில் முன்னாள் பிரதமர் நேரு மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை ( தேர்தல் நடந்த 489 இடங்களில் 364 தொகுதிகளில் வெற்றி) பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார்.
அதேபோன்று, 1957ம் ஆண்டு 371 தொகுதிகளிலும் மற்றும் 1962ம் ஆண்டு 361 தொகுதிகளையும் (மொத்தம் 494 தொகுதிகள்) கைப்பற்றி நேரு தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.
அவரது மறைவுக்கு பின்னர், அந்த சாதனையை அவரது மகள் இந்திரா காந்தி படைத்தார். இந்த நிலையில், 48 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த் சாதனையை பிரதமர் மோடி படைத்து இந்திய சரித்திரத்தில் தன்னை சக்திவாய்ந்த தலைவராக பதிவு செய்துள்ளார்.
இதனிடையே, கடந்த 1999ம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாயும், 2009ல் பிரதமர் மன்மோகன் சிங்கும் தொடர்ந்து ஆட்சியை பிடித்தனர். ஆனால், தனிப்பெரும்பான்மை இல்லாமல், கூட்டணி கட்சிகளின் துணையுடன் ஆட்சியை தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications