"மோடி vs ராகுல்.." ஒரே மேடையில் விவாதம்.. ஆஹா சூப்பர்.. திடீரென அனுப்பப்பட்ட லெட்டர்! அடுத்து என்ன
டெல்லி: நமது நாட்டில் லோக்சபா தேர்தல் இப்போது நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஒரே மேடை விவாதம் நடத்த வேண்டும் என்று திடீரென கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நமது நாட்டில் இந்த முறை மொத்தம் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. அதில் 3 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்னும் நான்கு கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கிடையே லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஒரே மேடை விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கடிதம்: முன்னாள் நீதிபதிகள் மதன் பி லோகுர், அஜித் பி ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என் ராம் ஆகியோர் இது தொடர்பாக அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளனர். இரு தரப்பும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்றும் தங்ககள் எதிர்கொள்ளும் சவால்களை விளக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரு தரப்பும் இதுவரை மாறி மாறி குற்றச்சாட்டுகளை மட்டுமே சுமத்தி வரும் நிலையில், அர்த்தமுள்ள பேச்சுகளைக் கேட்காமல் பொதுமக்கள் கவலையடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான கடிதத்தில், "18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. ஆளும் பாஜக மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் என இரு தரப்பும் பிரச்சாரத்தின் போது ஜனநாயகம், சமூக நீதி என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
மாறி மாறி கேள்வி: நமது அரசியலமைப்பு, ஜனநாயகம், 370ஆவது சட்டப்பிரிவு மற்றும் சொத்து மறுபங்கீடு எனக் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பிரதமர் மோடி பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். அதேபோல அரசியலமைப்புச் சட்டத்தைச் சிதைப்பது, தேர்தல் பத்திரம் மற்றும் சீனாவுக்கு எதிரான நடவடிக்கை, எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் பிரதமர் மோடியிடம் பல கேள்விகளை எழுப்பி உள்ளார். மேலும், பிரதமர் மோடியை விவாதத்திற்கும் கார்கே அழைத்துள்ளார்.
விவாதம் தேவை: இரு தரப்பினரும் எதிர்த்தரப்பின் தேர்தல் அறிக்கைகள் குறித்தும், சமூக நீதித் திட்டம் குறித்தும் பரஸ்பரம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்தச் சூழலில் பல்வேறு பிரச்சினைகளில் இரு தரப்பினர் பதிலைக் கேட்டால் பொதுமக்களுக்கு அது நன்றாக இருக்கும்.. இந்த பொது விவாதம் மூலம் மக்களுக்குப் பல விஷயங்கள் தெரிய வரும். இது சிறந்த முன்னெடுப்பாக அமையும். மேலும், இது போன்ற விவாதம் தான் துடிப்பான ஜனநாயகத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும்.
கட்சி சார்பற்ற மற்றும் வணிக ரீதியாக இல்லாமல் நடத்தப்படும் ஒரு பொது விவாதத்தின் மூலம் நாம் நமது அரசியல் தலைவர்களிடம் நேரடியாகப் பல கேள்விகளைக் கேட்கலாம். இதன் மூலம் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். வெறுமன கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகள் என்று இல்லாமல் அதற்கான பதிலையும் கேட்பது நமது ஜனநாயக செயல்முறையை வலுப்படுத்த உதவும் என்று நாங்கள் கருதுகிறோம்.
விதிமுறைகள் என்ன: நீங்கள் இருவரும் இரு தரப்பைத் தலைமை தாங்குவதால்.. நீங்கள் இந்தத் தேர்தலின் முக்கியப் பிரச்சனைகள் குறித்து பரஸ்பரம் பொது விவாதம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். விவாதத்தின் இடம், எவ்வளவு நேரம் நடக்கும், விவாதத்தை நடத்துபவர் யார், விவாதம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இரு தரப்பும் இணைந்து அதற்கான விதிமுறைகளை வகுக்கலாம்.
இந்த கோரிக்கையை நீங்கள் பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒரு வேலை உங்களால் நேரடியாக விவாதத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றால்.. உங்கள் பிரதிநிதி கூட உங்கள் சார்பில் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications